
இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கான தலைமைப் பயிற்சியாளர், இலங்கைக் கிரிக்கெட் சபைத் தேர்தலுக்குப் பின் நியமிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இலங்கை கிரிக்கெட் அணிக்கு இடைக்கால பயிற்சியாளராக ஜெரோம் ஜெயரட்ண செயற்பட்டுவருகிறார்.
பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கு எதிராக நடைபெற்ற தொடர் களை இலங்கை அணி இழந்ததன் எதிரொலியாக தலைமைப் பயிற்சியாளராக செயற்பட்டு வந்த மாவன் அத்த பத்து கடந்த செப்டெம்பர் மாதம் பதவி விலகினார்.
அவரின் வெற்றிடத்தை நிரப்புவதற்கு இடைக்கால பயிற்சியாளராக ஜெரோம் ஜெயரட்ண நியமிக்கப்பட்டார். அவரின் பயிற்றுவிப்பின் கீழ் இலங்கை அணி மேற்கிந்தியத் தீவுகளுடன் மோதிய 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-–0 என்ற அடிப்படையில் வெற்றிபெற்றது.
இந்நிலையில் நிரந்த தலைமைப் பயிற்சியாளர் இலங்கைக் கிரிக்கெட் சபையின் தேர்தலுக்குப் பின்னர் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரையில் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு 5 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது.
அதேவேளை அடுத்த ஆண்டு ஆரம்பம் முதல் நடைபெறவுள்ள ஆசிய கிண்ணம் மற்றும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணம் ஆகிய தொடர்களுக்கு முன் தலைமைப் பயிற்சியாளர் நியமிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.





