
சீனாவில் மரணமடைந்து விட்டதாகக் கருதப்பட்ட பெண், கடந்த 10 ஆண்டுகளாக இண்டர்நெட் மையத்தில் தங்கி வீடியோ கேம் விளையாடி வந்ததைப் பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.
சீனாவின் ஜீஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் பெற்றோருடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். அதனைத் தொடர்ந்து ஜியோவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிசார் அவரைத் தேடினர்.
ஆனால், அவர் சிக்கவில்லை. இதனால் அவர் இறந்திருக்கலாம் என்ற முடிவிற்கு அவரது பெற்றோர் வந்தனர். இந்நிலையில், கடந்த வெள்ளியன்று இண்டர்நெட் மையம் ஒன்றில் பொலிசார் நடத்திய சோதனையில், போலி அடையாள அட்டை வைத்திருந்ததற்காக குறித்த பெண் பிடிபட்டார்.
அதனைத் தொடர்ந்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், அவர் 10 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவர் என்பது தெரியவந்தது.
வீட்டை விட்டு வெளியேறிய அவர், இண்டர்நெட் மையத்திலேயே கடந்த 10 ஆண்டுகளாக தங்கி வந்துள்ளார். ஒரு வித துப்பாக்கிச் சுடும் வீடியோ கேமிற்கு இரசிகையான குறித்த பெண் பகல் நேரங்களில் இண்டர்நெட் மையத்தில் விளையாடியே பொழுதைக் கழித்துள்ளார்.
இரவு நேரங்களில் சில சமயம் இண்டர்நெட் மையத்திலும், பல நேரங்களில் பாத்ரூம்களிலும் தூங்கி வந்துள்ளார். செலவிற்கு இண்டர்நெட் மையத்திற்கு வரும் மற்ற வாடிக்கையாளர்களிடமிருந்து அவர் பணம் பெற்று வந்துள்ளார்.
இது தவிர சில சமயங்களில் மற்ற மையங்களில் கேஷியராகவும் பணி புரிந்து வந்துள்ளார். போலி அடையாள அட்டை வைத்திருந்ததற்காக அவருக்கு 1000 யுவான் அபராதம் விதித்த பொலிசார், விசாரணைக்குப் பின் அவரை பெற்றோருடன் சேர்த்து வைத்தனர்.
கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய மகள் எப்படியும் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில் இதுவரை அவரது தாயார் போன் நம்பரைக் கூட மாற்றவில்லையாம். 10 வருடங்களுக்குப் பின் மகள் மீண்டும் திரும்ப கிடைத்த மகிழ்ச்சியில் உள்ள அவரது அம்மா, மீண்டும் மகளைத் திட்ட மாட்டேன் என உறுதியளித்துள்ளார்.





