
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க குளிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் எனத் தெரிவித்து சுவீடன் மன்னரான கார்ல் 16 ஆம் கஸ்டப் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இது தொடர்பில் சுவீடன் பத்திரிகையான சவென்ஸ்கா டக்பிளேடட் செய்தி வெளியிட்டுள்ளது.
சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதில் தீவிர கவனம் செலுத்தி வரும் 69 வயதான மன்னர் கஸ்டப், குளியலின் போது பெருமளவு நீரும் சக்தியும் விரயமாவது தனக்கு பெரிதும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதனால் அனைத்து வகையான குளியல்களையும் தடை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேற்படி சக்தி விரயத்தைத் தடுக்க அவர் அண்மையில் குளியல் வசதியில்லாத இடத்தில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
1972 ஆம் ஆண்டில் சுவீடனினில் இடம்பெற்ற முதலாவது ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் மாநாட்டில் பங்கேற்ற மன்னர் கஸ்டப், எதிர்வரும் 30 ஆம் திகதியிலிருந்து டிசம்பர் 11 ஆம் திகதி வரை பாரிஸ் நகரில் இடம்பெறவுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான கூட்டத்திலும் கலந்து கொள்ளவுள்ளார்.





