இலங்கை, இந்தியா, இங்கிலாந்து 19 வயதுட்குட்பட்ட கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான முத்தொடர் இலங்கையில் இன்று ஆரம்பமாகின்றது. இந்தியா மற்றும் இங்கிலாந்து 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிகள் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கையுடனான முத்தொடரில் மோதுகின்றன. இந்தத் தொடருக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு நேற்றுமுன்தினம் கொழும்பில் நடைபெற்றது.
இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்தின் உயரதிகாரி கார்ல்டன், அடுத்த ஆண்டு ஜனவரியில் பங்களாதேஷில் நடைபெறவுள்ள இளையோருக்கான உலகக் கிண்ணத் தொடருக்கான முன் ஏற்பாட்டுத் தொடராகத்தான் இந்த முத்தொடரை கருதுகின்றோம்.
உலகக் கிண்ணத்தில் மோதப்போகும் இவ்வணிகள் சர்வதேச அரங்குகளில் விளையாடி தங்களது அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளமுடியும். இந்தப் போட்டிகள் அனைத்தும் சர்வதேச அரங்குகளான ஆர்.பிரமேதாச மற்றும் எஸ்.எஸ்.சி ஆகிய கிரிக்கெட் அரங்குகளில் நடைபெறவிருக்கின்றன என்றார்.
இதில் பேசிய இலங்கை அணியின் பயிற்சியாளர் ரொஜர் விஜேசூரிய, இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுடன் எமது அணி மோதப்போவதை நாம் மிகப்பெரிய சாவாலாக எடுத்துள்ளோம். இது எமக்கு இன்னும் இன்னும் பலம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கிறோம். இளையவர்களை சர்வதேச அளவிற்கும் அதேவேளை தேசிய அணிக்கு பிரவேசிப்பதற்கான முன்னேற்பாடாகவும் இதைக் கருதுகிறோம் என்றார்.





