
அவிசாவளை புவக்பிட்டிய பிரகதிபுர பகுதியில் வசித்த ஜீ.கிரிஷாந்தி 2012 ஆம் ஆண்டு பணிப்பெண்ணாக சவுதி அரேபியா சென்றுள்ளார்.
1997 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19 ஆம் திகதி பிறந்த இவர் சவுதி சென்றபோது, இவருக்கு வயது 15. மருதானையிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடாகவே கிரிஷாந்தி வெளிநாடு சென்றுள்ளார்.
இந்நிலையில், இந்த வருடம் மே மாதம் 6 ஆம் திகதி கிரிஷாந்தி உயிரிழந்ததாக தகவல் கிடைத்திருந்தும் அவரது உடலை இலங்கைக்குக் கொண்டு வர 7 மாதங்களாகியுள்ளன.
தமது மகள் தற்கொலை செய்துகொண்டதாக மே மாதம் 6 ஆம் திகதி பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நாளுக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் தொலைபேசியில் வீட்டிலுள்ளவர்களுடன் கிரிஷாந்தி உரையாடியுள்ளார்.
இதன்போது, மே மாதமே இலங்கைக்கு வருவதாக கிரிஷாந்தி பெற்றோரிடம் கூறியுள்ளார்.
கிரிஷாந்தியின் பெற்றோரின் கூற்றுக்கு அமைய, அவர் வெளிநாடு சென்ற சந்தர்ப்பத்தில் 16 வயதைப் பூர்த்தி செய்திருக்கவில்லை என்பது தெளிவாகப் புலப்படுகின்றது.
ஐக்கிய நாடுகளின் சிறுவர் கொள்கைக்கு அமைய, 16 வயதுக்குக் குறைந்த அனைவரும் சிறார்களாகக் கருதப்படுவதுடன், சிறார்கள் வெளிநாடுகளுக்கு தொழில் நிமித்தம் செல்வது சட்ட விரோதமானதாகவும் கருதப்படுகின்றது.
சிறிது காலத்திற்கு முன்னர் சவுதியில் கொலை செய்யப்பட்ட ரிசானா தொடர்பில் உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் அதிகக் கவனம் செலுத்தப்பட்டது.





