கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரதத்தின் முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். இந்த விபத்து இன்று (28.12.2015) பிற்பகல் 1.30 மணியளவில் நாவலப்பிட்டி கலபொட புகையிரத நிலையத்திற்கும் தெஹிந்த புகையிரத நிலையத்திற்கும் இடையில் இடம்பெற்றுள்ளது. இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி மேற்படி புகையிரதம் சென்று கொண்டிருந்த வேளை தெஹிந்த புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் இளைஞர் இவ்வாறு புகையிரதத்தில் பாய்ந்து உயிரிழந்துள்ளார். இதனால் உடல் நசுங்கி குறித்த இளைஞர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் அட்டன் புகையிரத நிலைய உத்தியோகத்தரிடம் அவரது சடலம் கையளிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை அறிந்த அட்டன் பொலிஸார் இளைஞரின் சடலத்தினை பொறுப்பேற்றுள்ளனர்.
எனினும் இவ்வாறு உயிரிழந்தவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கும் பொலிஸார் இவர் 25 வயது மதிக்கதக்கவர் எனவும் தெரிவிக்கின்றனர். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






