
இலங்கை சுதந்திர தினத்தின் 68வது தேசிய நிகழ்வு எதிர்வரும் பெப்ரவரி 4ம் திகதி காலி முகத்திடலில் நடைபெறவுள்ளது. வழமைக்கு மாறாக இம்முறை இரண்டு கட்டங்களாக தேசிய தின நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன. காலையில் முப்படையினர் மற்றும் பொலிஸாரின் அணிவகுப்பு நிகழ்வுகளும், மாலை கலாசார நிகழ்வுகளும் நடைபெறவிருப்பதாக சட்டம் ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
சுதந்திரதின நிகழ்வுகள் தொடர்பாக ஊடக நிறுவனங்களின் முக்கியஸ்தர்களுடான கலந்துரையாடலொன்று நேற்று புதன்கிழமை பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற்றது.இதில் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக மற்றும் பிரதி அமைச்சர் கருணாரட்ன பரணவித்தாரன ஆகியோர் கலந்துகொண்டனர்.
சுதந்திரத்தின் இதயத்துடிப்பு’ என்ற தொனிப்பொருளில் 68வது சுதந்திர தினம் இம்முறை கொண்டாடப்படவுள்ளது.காலை நிகழ்வுகள் 8.45 மணிக்கு ஜனாதிபதியின் வருகையுடன் ஆரம்பமாகவிருப்பதால், இராணுவ அணிவகுப்புக்களை பார்வையிட விரும்பும் மக்கள் 8 மணிக்கு முன்னர் அதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு சமூகமளிக்குமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார். பெப்ரவரி 4ம் திகதி மாலை 7 மணி முதல் 10.30 மணிவரை கலாசார நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இதில் கலந்துகொள்வதுடன், இதனைப் பார்வையிடும் மக்களை 7 மணிக்கு முன்னர் வருமாறும் அமைச்சர் தெரிவித்தார்.
சுதந்திர தின நிகழ்வுகள் தொலைக்காட்சிகள் ஊடாக நேரடி ஔிபரப்புச் செய்யப்படவுள்ளன.அதேநேரம், சுதந்திர தினத்தை முன்னிட்டு பெப்ரவரி மாதம் 1ம் திகதி முதல் ஒரு வாரத்துக்கு வீடுகள், அலுவலகங்கள், பொது இடங்களில் தேசியக் கொடிகளைப் பறக்கவிடுமாறும் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. அது மாத்திரமன்றி சுதந்திர தினத்தன்று மும்மத ஸ்தலங்களிலும் விசேட மத வழிபாடுகள் நடைபெறவுள்ளன.





