யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து நாகரிகத் துறை ஒழுங்கமைத்திருந்த முதலாவது அனைத்துலக சைவ மாநாடானது மாசி 12,13,14ஆம் திகதிகளில் சிறப்பாக நடைபெற்றிருந்தது.
இலங்கையைச் சேர்ந்த கல்வியலாளர்களும் ஆய்வாளர்களும்,வெளி நாடுகளைச் சார்ந்த பல கல்வியலாளர்களும் இம்மாநாட்டில் தம காத்திரமான ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்திருந்தனர்.
மூத்த தலைமுறையினர்,’இளந் தலைமுறையினர் சைவத்தின் மீதும் தமிழின் மீதும் ஆர்வமற்றிருக்கின்றார்கள்’ எனப் புலம்புவதை விடுத்து இளந் தலைமுறையினர்க்கும் தம் சைவ சமயம் சார் அறிவினை விருத்தி செய்ய நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினர் இளம் ஆய்வாளர்களுக்கும் இம் மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்க வாய்ப்பளித்திருந்தமை சிறப்பம்சமாகும்.
சைவ சமயம்சார் கொள்கைகளை பிற்போக்கு சிந்தனைகள் என்ற போர்வையில் புறந்தள்ளும் இன்றைய காலகட்டத்தில் சைவசமயம்சார் இலக்கியங்களை மீள் வாசிப்பிற்கு உட்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
இந்து சமயம்சார் கொள்கைகளில் பொதிந்துள்ள மெஞ்ஞானக் கருத்துக்கள் எவ்வாறு இன்றைய விஞ்ஞானத்துடன் ஒன்றிணைந்துள்ளன என்பதைப் புலப்படுத்தும் ஆய்வுகள் விரிவடைய வேண்டியது அவசியமானதாகும்.
தொடரும் காலங்களில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக இந்து நாகரிகத் துறை தனது அனைத்துலக சைவ மாநாட்டினை விரிவுபடுத்திக் கொள்ள வேண்டும். அவற்றில் முற்போக்கான ஆய்வுகளுக்கும் இடமளிக்க வேண்டும். ஏனைய பல்கலைக் கழக கல்வியலாளர்களும் இதனை, யாழ் பல்கலைக் கழக இந்து நாகரிகத் துறைசார் மாநாடாக நோக்காது, சைவ சமயம்சார் மறு மலர்ச்சிக்காக தூர நோக்கு சிந்தையுடன் செயற்படும் யாழ் பல்கலைக் கழக இந்து நாகரிகத் துறையினருடன் இணைந்து செயற்பட வேண்டும்.
சைவ உலகும் சைவ மக்களும் பேராதரவு வழங்க வேண்டும்.கலாச்சாரச் சீர்கேடுகளுக்குள் சிக்கித் தவிக்கும் எமது சமூகத்தின் போக்கை மாற்றியமைக்க இவ்வாறான மாநாடுகள் அவசியமாகிறது.
சேமமடுவூர் சிவகேசவன்
தமிழ்த் துறை,
பேராதனைப் பல்கலைக் கழகம்.






