கடந்த 02.03.2016 அன்று பிற்பகல் 4.00 மணியளவில் புதுக்குடியிருப்பு பொன்விழா மண்டபத்தில் வன்னிக்குறோஸ் கலாசாரப் பேரவையின் தலைவர் சி.நாகேந்திரராசா தலைமையில் கலைஞர்களுக்கான விசேட ஒன்றுகூடலும் தென்னிந்திய திரைப்பட நடிகருமான திரு.சண்முகராசா அவர்களை வரவேற்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
முன்னதாக விருந்தினர்களை பாரம்பரிய இன்னியம், குதிரையாட்டம், காவடி, கரகம், குடமூதுதல் போன்ற இசை நிகழ்வுடன் வரவேற்று செல்லப்பட்டனர். வரவேற்புரையில் வன்னி குறோஸ் கலாசார பேரவையின் செயலாளர் சி.வேதவனம் நிகழ்த்த வரவேற்பு நடனத்தினை கற்சிலைமடு பாடசாலை மாணவர்களால் நிகழ்த்தப்பட்டது.
தொடர்ந்து கருத்துரைகள், சிறப்புரைகள் இடம்பெற்றன. கருத்துரைகள் வன்னி குறோஸ் கலாசாரப் பேரவையின் வன்னி மாவட்ட இணைப்பாளர் ச.ரூபன், தென்னிந்திய திரைப்பட நடிகரும் இயக்குனருமான தி;ரு.சண்முகராசா, வன்னி குரோஸ் கலாச்சாரப் பேரவையின் சர்வதேச இணைப்பாளர் திரு.தவசீலன் (லண்டன்), வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கலாசாரப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தனது உரையில்..
கடந்த கால யுத்தத்தினால் எமது உயிர்கள் பறிக்கப்பட்டன, உடமைகள் அழிக்கப்பட்டன. அதில் கலைஞர்களும் உள்ளடங்குவர் ஆனால் எமது கல்வி, கலாச்சார பண்பாடு எமது கலைஞர்களின் மன உறுதி யாராலும் பறிக்கவோ, மறைக்கவோ முடியாது. பல ஆயிரம் கலைஞர்கள் இந்த யுத்தத்தில் கொல்லப்பட்டனர், கலைஞர்களின் உடமைகள் அழிக்கப்பட்டன, யுத்தத்திற்கு முன்னரான காலப்பகுதியில் தேசியத் தலைவரால் கலை கலாச்சாரம் கட்டிக்காக்கப்பட்டு தமிழர்களின் கலை, கலாச்சாரம் மேலோங்கி நின்றன.
இன்று எஞ்சியுள்ள ஒருதொகை கலைஞர்களை ஊக்குவித்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே தமிழக கலைஞர், குணச்சித்திர நடிகரும், கலைஞரும் இலக்கிய கலாநிதியுமான சண்முகராசா அவர்களை நாம் வரவேற்கிறோம். இவர் பல திரைப்படங்களை நடித்தவர் குறிப்பாக விருமாண்டி படத்தில் காவல்துறை பாத்திரமேற்று முதல் படமாக நடித்திருக்கிறார்.
அண்மையில் வெளியாகிய பூலோகம் படத்திலும் நடித்த ஒரு நடிகர். இன்று எமது கலைஞர்களோடு தமிழகத்தின் கலைஞர்கள் கலந்து கொள்வதால் எமது கலாச்சாரத்தின் தமிழகத்தின் கலப்பு ஏற்பட்டுள்ளது. எமது கல்வி, கலை, கலாச்சார பண்பாடு பொருளாதார மேம்பாட்டில் வளர வேண்டியவர்களாக இருக்கின்றோம் என தெரிவித்தார். இந்நிகழ்வில் அண்ணாவிமார்கள், கலைஞர்கள், படைப்பாளிகள் என 300க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.






