இந்தியாவின் மதுரை அருகே உச்சம்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் வருவாய்த்துறை அதிகாரி மிரட்டலால் அகதி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனையடுத்து அங்கு பதற்றமான சூழல் நிலவியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள உச்சம்பட்டி இலங்கை அகதிகள் முகாம் செயல்பட்டு வருகிறது. அங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் அகதிகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட வருவாய்த்துறை அதிகாரியொருவர் இன்று முகாமிற்கு சென்றுள்ளார்.
அப்போது ரவிச்சந்திரன் மற்றும் அவரது மகன் மட்டும் இல்லாதது தெரியவந்தது. இதுகுறித்து விளக்கம் கேட்டபோது, ரவிச்சந்திரன் அங்கு வந்துள்ளார். தனது மகனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக அப்போது அவர் தெரிவித்தார்.
ஆனால், அதனை ஏற்காத அதிகாரி, வருகை பதிவேட்டில் குறிப்பிட முடியாது என்று தெரிவித்துள்ளார். அத்துடன் ரவிச்சந்திரனை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ரவிச்சந்திரன், அங்கிருந்த உயர் மின்னழுத்த கம்பத்தில் ஏறி, தற்கொலைக்கு முயன்றார்.
அப்போது மின்சாரம் தாக்கியதில் கீழே விழுந்து ரவிச்சந்திரன் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அகதிகள் வருவாய்த்துறை அதிகாரியை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
அவர்களை தடுக்க வந்த பொலிஸார் மீதும் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் காவல்துறை அதிகாரிகள் ஈழ அகதிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.






