தமிழகத்தின் மகளாக, மருமகளாக கேட்கின்றேன் : நடிகை குஷ்பு உருக்கம்!!

546

Kushboo

தமிழகத்தின் மகளாக, மருமகளாக நான் கேட்கிறேன் காங்கிரஸ்–தி.மு.க. கூட்டணியை வெற்றிப் பெற வையுங்கள் என குஷ்பு பேசியுள்ளார்.

நாகர்கோவில் நகர காங்கிரஸ் சார்பில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே பொதுக்கூட்டம் நடந்துள்ளது. அதில் அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார்.

அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தி.மு.க–காங்கிரஸ் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் குலாம் நபி ஆசாத் கலந்து கொள்கிறார்.

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக நான் மனுதாக்கல் செய்யவில்லை. கட்சி தலைவி சோனியாகாந்தி, ராகுல்காந்தி போட்டியிட சொன்னால் போட்டியிடுவேன்.

இந்த தேர்தலில் ஜனநாயகம் ஜெயிக்க வேண்டுமென்று எண்ணுகிறோம்.
ஜனநாயகம் ஜெயிக்கும் என்ற நம்பிக்கை எங்களிடம் இருக்கிறது. மக்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்க முடியாது என பேட்டியளித்துள்ளார்.

பின்னர் பொதுக்கூட்டத்தில் குஷ்பு பேசுகையில், காங்கிரஸ் கட்சி இந்தியாவில் 130 ஆண்டுகளுக்கு முன்னர் வளர ஆரம்பித்த ஒரு ஆலமரம்.

அதில் உள்ள கிளைகள்தான் இன்று பா.ஜ.க மற்றும் தமிழக திராவிடக் கட்சிகள். அதில் உள்ள கோடிக்கணக்கான தொண்டர்களில் ஒருவராகத்தான் நானும் உள்ளேன்.

நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் ‘இலைகள்’ உதிரும், ‘சூரியன்’ உதயமாகும். ‘கைகள்’ உதவும். இது சாதாரண கை இல்லை. இந்தியாவில் வாழும் மக்கள் ஒவ்வொருவரின் நம்பிக்கை.

வரும் தேர்தலில் நாங்கள் ஜெயித்தால் யு.கே.ஜி. முதல் கல்லூரி வரை இலவச கல்வி கொடுப்போம். தமிழக மக்கள் மாற்றம் தேவை என்று கூறி வருகிறார்கள். அந்த மாற்றம் நிச்சயம் வரும்.

அதை தி.மு.க–காங்கிரஸ் கூட்டணியால் மட்டுமே கொண்டு வர முடியும். கொண்டு வருவோம். காங்கிரஸ்–தி.மு.க. கூட்டணியை ஜெயிக்க வைப்போம். தமிழகத்தின் மகளாக, மருமகளாக நான் கேட்கிறேன்.

மாற்றம் வரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. வரும் தேர்தலில் தி.மு.க– காங்கிரஸ் அமோக வெற்றி பெறும் என பேசியுள்ளார்.