வவுனியாவில் மாணவன் ஒருவர் மீது சக மாணவர்கள் தாக்குதல்!!

943

Attack

வவுனியாவில் தனியார் கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் மாணவன் மீது அதே கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் க.பொ.த உயர் தர மாணவர்கள் 4 பேர் கொண்ட குழுவினர் மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த மாணவன் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

வவுனியா கனகராயன்குளம் பகுதியிலில் வசித்துவரும் வேல்முருகன் பார்த்தீபன் என்ற 17 வயது பாடசாலை மாணவன் வவுனியாவில் தனியார் கல்வி நிலையத்தில் க.பொ.த. உயர்தர வகுப்பில் கல்வி கற்று வருகின்றார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (24.04.2016) கல்வி நிலையத்திற்கு சென்று கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயம் கல்வி நிலையத்தின் மாணவர் பதிவேடு அட்டையினை விநியோகம் செய்து வந்த தனியார் கல்வி நிலையத்தின் ஊழியர் மாணவர்கள் வகுப்பறைக்குச் சென்று மூன்றாவது வரிசையில் அமர்ந்திருந்த மாணவர்களுக்கு இரண்டாவது வரிசையிலிருந்த மாணவரிடம் பதிவேடு அட்டையினை வழங்கும்படி கூறியுள்ளார்.

அதற்குமாணவர் கூறியுள்ளார் உள்ளே வர முடியவில்லை, அதனால் என்னை வழங்குமாறு தெரிவித்துள்ளனர் என்று. அதற்கு மற்றைய மாணவர்கள் சரி நீ வெளியே வா பார்த்துக்கொள்கின்றோம் என்று குறித்த மாணவரிடம் தெரிவித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை மாலையில் வகுப்பு முடிவடைந்து மாணவர்கள் வெளியே சென்றபோது குறித்த மாணவனும் கனகராயன்குளம் செல்வதற்கு பேரூந்திற்கு சென்றபோது காமினி மகாவித்தியாலயத்திற்கு அருகில் ரயில் பாதுகாப்புக் கடவைக்கு அருகில் வைத்து நான்கு மாணவர்களும் ஒன்றாகச் சேர்ந்து குறித்த மாணவனை தலைக்கவசத்தினால் தலையில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

காயமடைந்த மாணவனுடன் சென்ற மற்றுமொரு மாணவன் குறித்த மாணவனை வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

தலையில் தலைக்கவசத்தினால் தாக்குதல் நடத்தியதில் மாணவனுக்கு ஞாபக மறதி ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலையில் வைத்தியர்கள் தொவித்துள்ளதுடன் மாணவனும் சில விடயங்களை முன்னுக்குப் பின் முரண்பட்ட தகவல்களை தெரிவிப்பதாக மாணவனின் தந்தை தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் திங்கட்கிழமை குறித்த மாணவன் மீது தாக்குதல் நடத்தியவர்களை பொலிசார் கைது செய்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

தனியார் கல்வி நிலையத்தின் மாணவர்களிடையே இடம்பெற்ற மோதல் தொடர்பாக குறித்த தனியார் கல்வி நிலையத்தின் இயக்குநரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது இத்தாக்குதல் சம்பவம் கல்வி நிலையத்திற்கு வெளியே இடம்பெற்றுள்ளதாகவும் மாணவர்களின் கைகலப்பிற்கும் கல்வி நிலையத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.

கல்வி நிலையத்தில் பணிபுரியும் ஊழியரின் செயற்பாடு தான் தாக்குதல் இடம்பெற காரணமாக இருந்துள்ளது என வினவியபோது இது ஒரு விடயமே இல்லை இதற்காக தாக்குதல் நடைபெற்றிருக்கத் தேவையில்லை என்று மேலும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை குறித்த மாணவர்களை பொலிசார் கைது செய்துள்ளதையடுத்து மாணவர்களின் நண்பர்கள் என நம்பப்படும் சிலரால் நேற்று (26.04.2016) இரவு குறித்த தனியார் கல்வி நிலையத்தின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.