
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஏப்ரல் மாதம் நடாத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக உயர்கல்வி இராஜாங்க மொஹான் லால் கிரேரு தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
ஏப்ரல் மாதம் பரீட்சை நடாத்தி ஜனவரி மாதம் மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்ப்பதே இதன் நோக்கமாகும்.
தற்போதைய நடைமுறையில் பல்கலைக்கழக அனுமதிக்காக மாணவ மாணவியர் சுமார் இருபது மாதங்கள் காத்திருக்க நேரிட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் பரீட்சை நடாத்தினால் இந்தக் காலத்தை எட்டு மாதங்களாக குறைக்க முடியும். பல்கலைக்கழக அனுமதி காலம் தாழ்த்தப்படுவதனால் தனியார் நிறுவனங்கள் நோக்கிப் போவதும் அதிகரித்துள்ளது.
இந்த நிலைமையை சரி செய்வதே அரசாங்கத்தின் நோக்கமாக அமைந்துள்ளது.ஏப்ரல் மாதம் பரீட்சை நடாத்துவது குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் பரீட்சைத் திணைக்களத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது எனவும் கிரேரு தெரிவித்துள்ளார்.





