கார் விபத்தில் கர்ப்பிணி பெண் உயிரிழந்த பிறகும் அவருக்கு பிரசவம் பார்த்து வைத்தியர்கள் குழந்தையை உயிருடன் காப்பாற்றினர்.அமெரிக்காவின் மிசவுரி மாகாணம் கேப் கிரர்டேயு நகரில் சாரா இல்லர் மற்றும் அவரது கணவர் மேட் ரைடர் ஆகியோர் வசித்து வருகின்றனர். கர்ப்பிணியான சாராவை அழைத்துக் கொண்டு ரைடர் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
மருத்துவமனைக்கு செல்லும் வகையில் வீட்டில் இருந்து சுமார் 60 மைல் தூரத்தில் அவர்களது கார் விபத்துக்குள்ளானது.தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சாரா மற்றும் ரைடர் இருவரையும் காரில் இருந்து வெளியே எடுத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனையில் சாரா ஏற்கனவே இறந்துவிட்டது தெரிய வந்தது. இதனையடுத்து, சாராவிற்கு மருத்துவர்கள் அவசரமாக சிசேரியன் செய்தனர்.அழகான பெண் குழந்தை உயிருடன் பிறந்தது. குழந்தை 2.24 கி.கி எடையுடன் இருந்தது. இருப்பினும் பிறந்தவுடன் குழந்தை வெண்டிலேட்டரில் வைத்து கண்காணிக்கப்பட்டது.
அந்த குழந்தை கண்களை திறந்து வைத்திய தாதியின் விரல்களை பற்றிக் கொண்டதாக சாராவின் தங்கை தெரிவித்தார். தாய் இறந்த பிறகு குழந்தை பிறந்தால் ஒட்சிசன் பற்றாக்குறையால் குழந்தைக்கு மூளை பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்று மருத்துவர்கள் சோதனை செய்து வருகின்றனர்.இருப்பினும் குழந்தை நன்றாக இருப்பதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் தந்தையான மேட் ரைடர் சிகிச்சை பெற்று வருகிறார்.