திமுக பொருளாளர் ஸ்டாலினை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை என தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
தமிழக முதல்வராக ஜெயலலிதா 6வது முறையாக நேற்று பதவியேற்றுக்கொண்டார். இந்த விழாவில் தி.மு.க பொருளாளர் ஸ்டாலின் மற்றும் அக்கட்சி எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர்.
இந்த விழாவில் ஸ்டாலினுக்கு பத்தாவது வரிசையில் இடம் அளிக்கப்பட்டிருந்தது. இதற்கு தி.மு.க தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்திருந்தார். தி.மு.க.வை, ஜெயலலிதா திட்டமிட்டு அவமானப்படுத்தியதாக குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஸ்டாலின் பங்கேற்பது தெரிந்திருந்தால், முன்வரிசையில் இடம் ஒதுக்க அறிவுறுத்தியிருப்பேன்.
ஸ்டாலினையோ, தி.மு.கவையோ அவமரியாதை செய்யும் எண்ணமில்லை. அதிகாரிகளின் பதவி வரிசைப்படியே இருக்கை ஒதுக்கப்பட்டது.
எனினும், விதிகளை தளர்த்தி முன் வரிசையில் இடம் ஒதுக்க அறிவுறுத்தியிருப்பேன்.
மேலும், மாநில மேம்பாட்டிற்காக தி.மு.க செயல்படுவதற்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் எனக்கூறியுள்ளார்.






