புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் சந்தேக நபரான சுவிஸ் குமார் என்று அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் எவ்வாறு கொழும்புக்கு தப்பி சென்றார் என்பது தொடர்பிலான விசாரணை அறிக்கையை அடுத்த வழக்கு தவணையின் போது மன்றில் சமர்பிப்பதாக குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவு பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் தொடர்ந்து பன்னிரண்டு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை பதில் நீதவான் கருப்பையா ஜீவராணி உத்தரவிட்டார்.
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு இன்றைய தினம் (01.06) புதன்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் கருப்பையா ஜீவராணி முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதன் போது மாணவி கொலை வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு உள்ள பன்னிரண்டு சந்தேக நபர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
கடந்த வழக்கு தவணையின் போது நீதிமன்றினால் கோரப்பட்ட அறிக்கைகள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதனால் அடுத்த தவணையில் அறிக்கைகளை சமர்ப்பிப்பதாக குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவு பொலிசார் நீதவானிடம் தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து பன்னிரண்டு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை பதில் நீதவான் கருப்பையா ஜீவராணி உத்தரவு இட்டார்.
மேலும் கடந்த மாதத்தில் புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியாவின் தாயார் சந்தேக நபர்களின் உறவினர்களினால் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பான வழக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நாளை வியாழக்கிழமை (2) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
எனினும் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் சமரசத்திற்கு உடன்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர வழக்கின் முக்கிய திருப்பு முனைக்கு உதவும் என அறியப்பட்ட டீ.என்.ஏ அறிக்கை இன்றைய தினம் மன்றில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.
-அத தெரன-






