சகோதரிகளான சிறுமிகள் இருவருக்குச் சித்திரவதை செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த சிறுமிகளின் சிறிய தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சகோதரிகளான 8 வயது மற்றும் 10 வயதுடைய சிறுமிகள் இருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிறுவர் நன்நடத்தைப் பிரிவு அதிகாரிகளுக்கு பொதுமக்களிடமிருந்து கிடைக்கபெற்ற தகவலுக்கமைய இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஏறாவூர் நகரிலுள்ள குறித்த வீட்டிற்குச் சென்ற அதிகாரிகள், சிறுமிகளைப் பரிசோதித்த போது அவர்கள் சித்திரவதை செய்யப்பட்மைக்கான தழும்புகளுடன் சிறுமிகளை மீட்டுள்ளனர்.
இந்நிலையில், மீட்கப்பட்ட சிறுமிகள் இருவரும் சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, சிறுமிகளின் பராமரிப்பாளராக இருந்துவந்த சிறிய தாய் மற்றும் அவரது உறவினர்களும் தொடர்ந்து சித்திரவதையை மேற்கொண்டு வந்தமை தொடர்பில் சிறுமிகள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
அத்துடன், குறித்த சிறுமிகள் இருவரும் நீண்டகாலமாக பாடசாலைக்கு அனுப்பப்படவில்லை என்பதும் இதன் போது தெரியவந்துள்ளது.
சிறுமிகளின் தாய் மத்திய கிழக்கு நாடொன்றுக்கு பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார். அவர் செல்லும்போது சிறுமிகளை தனது தங்கையிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றதாக சிறுமிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.












