முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் தான் தூங்கியதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை முற்றிலும் மறுப்பதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
குறித்த செய்தியில் எந்த உண்மைத்தன்மையும் இல்லை என தெரிவித்து, ஊடகங்களுக்கு அனுப்பப்பியுள்ள மறுப்பறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரவித்துள்ளார்.
கே.காதர் மஸ்தான் (பா.உ) 05.06.2016
அபிவிருத்துக்குழு இணைத்தலைவர்
(வவுனியா, மன்னார், முல்லைத்தீவு)
ஊடக மறுப்பறிக்கை
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் நான் தூங்கியதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை மறுப்பதுடன் அந்த செய்தி முற்றிலும் பொய் என்றும் அறியத்தருகின்றேன்.
கடந்த 02.06.2016அன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில், இணைத்தலைவர்களான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன், அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் (நான்) ஆகிய எங்களின் தலைமையில் மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தில் நீண்ட நேரமாக முல்லைத்தீவு வைத்தியசாலை காணிப்பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுக் கொண்டிருந்தவேளை நான் அங்கிருந்த வைத்தியர் ஒருவருடன் சிறிது நேரம் அது தொடர்பிலான மேலதிக தகவல்களை கேட்டுக்கொண்டிருந்ததால் சற்று குறித்த கலந்துரையாடலில் கவனம் செலுத்த முடியாமல் போனதால் நான் காணிப்பிரச்சினை என்னவானது? எனக் கேட்டேன். அவ்வாறு நான் கேட்டதற்கு வருந்துகிறேன்.
அத்துடன் ஊடகங்களில் வெளியான அளவிற்கு சபை அதிரும் வகையில் அங்கு எதுவுமே இடம்பெறவில்லை. அங்கிருந்த ஏனைய இணைத்தலைவர்களும் வருகை தந்திருந்தவர்களும் எனக்கான கௌரவத்தை வழங்கினார்கள்.
அத்துடன் சில இணைய ஊடகங்களில் (பா.உ) மஸ்தான் முன்னிலையில் சட்ட விரோத மாடு கடத்தல் என செய்திகளும் வெளிவந்துள்ளன இவைகள் அனைத்தும் முற்று முழுதாக உண்மைக்கு புறம்பான செய்திகளாகும் , இவ்வாறான செய்திகள் எனக்கு மன வருத்தத்தையும் அளிக்கிறது.
குறித்த சம்பவம் தொடர்பில் எந்த ஊடகமும் என்னை தொடர்புகொண்டு கேட்கவில்லை. மறாக அந்த செய்தியை பிரசுரிப்பதில் மும்முரம் காட்டினார்கள்.
நான் அரசியலுக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம் என்றாலும் சமூக சேவைகளில் நாங்கள் பழமை வாய்ந்தவர்கள்தான் அதனாலேயே எந்த அரசியல் பின்புலமும் இல்லாத என்னை மக்கள் தேர்ந்தெடுத்தனர், என்றும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை தொடர்ந்தும் நான் நிறைவேற்றுவேன்.
ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் மதிக்கப்படவேண்டியவர்கள். எம்மை சமூகத்தில் அடையாளப்படுத்துவதும் அதனை இல்லாமல் செய்வதும் அவர்களது எழுத்துக்களில் தங்கியுள்ளது.
ஆனாலும் சில அரசியல்வாதிகளின் பின்னுள்ள ஊடக பிச்சை வாங்கிகளால் எழுதப்படும் சில குறிப்புக்களால் இவ்வாறான தவறுகள் இடம்பெறுகின்றன.
அத்துடன் இனிவரும்காலங்களில் என்மீதான இவ்வாறான பொய்ப்பிரச்சாரம் செய்யும் காழ்ப்புணர்ச்சி கொண்ட அரசியல் ஊடகவியலாளர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன், நான் அரசியலுக்கு வந்தமை விஸ்தரிக்கப்பட்ட சமூக சேவைக்காகவும்,சமூகத்தில் நடக்கும் அநீதிகளை தட்டிக்கேட்கவும், நேர்மையான அரசியல் செய்யவுமே என இந்த ஊடக மறுப்பறிக்கையில் தெரிவித்துக்கொள்கின்றேன்.
நன்றி
கே.காதர் மஸ்தான் (பா.உ)
அபிவிருத்துக்குழு இணைத்தலைவர்
(வவுனியா, மன்னார், முல்லைத்தீவு)






