தரையிறங்க இடமளிக்காவிட்டால் சுட்டுக்கொல்லுங்கள் : ஈழத்தமிழ் அகதிகள் கதறல்!!

577

1

இந்தோனேஷிய கடற்கரையில் அநாதரவாக இருக்கும் குழந்தைகள், பெண்கள் உட்பட ஈழத்தமிழ் அகதிகள் 44 பேரையும் பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் பல கோரிக்கை விடுத்துள்ள நிலையில், படகை விட்டு வெளியேற முற்பட்டவர்களை இந்தோனேஷிய கடற்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி அச்சுறுத்தி தடுத்துள்ளனர்.

இந்தோனேஷிய கடற்கரையில் தரையிறங்க இடமளிக்காவிட்டால் தம்மை சுட்டுக்கொல்லுமாறு, ஈழத்தமிழ் அகதிகளில் பெண்ணொருவர் கூச்சலிடும் காட்சி அனைவரினதும் மனங்களை உருக்கும் விதமாக அமைந்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம்கோரும் நோக்கில், ஈழத்தமிழ் அகதிகள் 44 பேர் பயணித்த படகொன்று, கடந்த யூன் மாதம் 11 ஆம் திகதி மோசமான காலநிலை காரணமாக இந்தோனேஷியாவின் ஆச்சே மாநிலத்தின் கடற்கரையில் கரையொதுக்கப்பட்டது.

அகதிகளின் படகை, இந்தோனேஷிய மீனவர்கள் முதலில் கண்டுபிடித்த நிலையில், பின்னர் இதனை தடுத்து வைத்துள்ள இந்தோனேஷிய கடற்படையினர் குறித்த படகிலுள்ள ஈழத்தமிழர்களை தரையிறங்க அனுமதிக்காது தடுத்து வருகின்றனர்.

குறித்த படகில் கர்ப்பிணித்தாய் ஒருவரும் 9 குழந்தைகளும், 20 ஆண்களும் 14 பெண்களும் உள்ளனர்.

மிகவும் மோசமான கஷ்டங்களுக்கு மத்தியில் கடல் பயணத்தை மேற்கொண்டு நிர்க்கதியாக வந்துள்ள இந்த ஈழத் தமிழ் அகதிகளுக்கு, தரையிறங்க அனுமதி பெற்றுக்கொடுப்பதுடன், அவர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அதிகாரிகளை சந்திக்கவும் அனுமதிக்க வேண்டும் என ஸ்ரமா அமைப்பின் ஆசியபசுபிக் பிராந்திய பணிப்பாளர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, இந்தோனேஷிய அரசு நிர்க்கதியாக இருக்கும் ஈழத்தமிழ் அகதிகள் 44 பேரையும் பொறுப்பேற்காது, மீண்டும் இந்து சமூத்திரத்திற்குள் தள்ளிவிடுமோ என்று சர்வதேச மன்னிப்புச் சபை சந்தேகம் வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில் இன்று ஆச்சே கடற்கரையில் கரையொதுங்கியுள்ள படகிலுள்ள ஈழத் தமிழர்கள் 44 பேரும் படகிலிருந்து தரையிறங்க முற்பட்ட போது, இந்தோனேஷிய கடற்படையினர் வானை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்து அச்சுறுத்தி அகதிகளை தரையிறங்கவிடாது தடுத்துள்ளனர்.

பல ஆபத்துக்களை கடந்து தமது குழந்தைகளுடன் வந்துள்ள தம்மை, தரையிறங்க அனுமதிக்காவிட்டால் தம்மை சுட்டுக்கொல்லுமாறு ஈழத் தமிழர்கள் கோஷமிட்டனர்.

இதேவேளை ஆபத்தானப்படகு பயணத்தால் மிகவும் சோர்வடைந்துள்ள இவர்கள், தமது குழந்தைகளை கையில் ஏந்திய வண்ணம் “இந்தக் குழந்தைகளின் நிலை உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா” என்றும் இந்தோனேஷிய கடற்படையினரிடம் ஈழத்தமிழர்கள் கேள்வி எழுப்பினர்.

படகிலிருந்து தரையிறங்க அனுமதித்தால் ஈழத்தமிழர்களை ஏற்றுக்கொள்ள நேரிடும் என்பதாலேயே, இந்தோனேஷிய கடற்படையினர் இவ்வாறு மோசமாக நடந்துகொள்வதாக சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் குற்றஞ்சாட்டுகின்றன.

இதேவேளை, இந்தோனேஷியாவின் துணை ஜனாதிபதி யூசுப் கல்லாஹ், ஈழத் தமிழர்களை படகிலிருந்து தரையிறங்க அனுமதி அளித்துள்ள போதிலும், கடற்படை அதிகாரிகள் தொடர்ந்தும் தடுத்து வருவதாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில், கடந்த 15 ஆம் திகதி ஆச்சே பிராந்திய துணை ஆளுநர் முசாக்கிர் மனாப் ஈழத்தமிழ் அகதிகளின் படகில் ஏற முற்பட்டபோதும், கடற்படையினர் அதற்கு அனுமதி வழங்க மறுத்துள்ளதுடன் அவரை திருப்பி அனுப்பியுள்ளனர்.

இவ்வாறு ஈழத்தமிழ் அகதிகள் விடயத்தில் இந்தோனேஷிய அதிகாரிகளும் கடற்படையினரும் மிக மோசமாக நடந்துவருவது தொடர்பில் மனித உரிமை அமைப்புக்கள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன.

2 3 4