சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் மென்பொருள் பொறியாளர் சுவாதி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்குத் தொடர்பாக மேலும் இரு வீடியோ காட்சிகள் பொலிசாரிடம் சிக்கியுள்ளன.
இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சுவாதி கடந்த 24ம் திகதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஒரு மர்ம நபரால் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார். பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர சம்பவத்தில் குற்றவாளி யார் என பொலிசார் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
இந்த வழக்குத் தொடர்பாக விசாரணை செய்த பொலிசார் சுவாதி கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என ஒரு நபரின் வீடியோ காட்சிகளை வெளியிட்டனர்.
தற்போது மேலும் இரண்டு வீடியோ பதிவுகள் பொலிசாருக்கு கிடைத்துள்ளது. சுவாதி வீட்டில் இருந்து ரயில் நிலையம் செல்லும் வழியில் பொருத்தப்பட்டிந்த தனியார் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பொலிசார் ஆய்வு செய்தனர்.
இதில் சம்பவத்தன்று சுவாதி, தனது தந்தையுடன்மோட்டார் சைக்கிளில் செல்லும் போது, டீக்கடையில் நின்று கொண்டிருக்கும் ஒரு மர்ம நபர், சுவாதியைப் முழு கவனத்துடன் வேடிக்கை பார்த்ததும், பின்னர் சுவாதியைப்பின் தொடர்ந்து செல்வதும் பதிவாகியுள்ளதாம்.
இந்த மர்ம நபர் தான், ஏற்கெனவே வெளியிடப்பட்ட விடியோ காட்சியிலும் உள்ளாராம். மேலும், மற்றொரு கமெராவில் உள்ள காட்சியில், அந்த நபர், தப்பியோடும் காட்சி கிடைத்துள்ளதாம்.
இந்த இரு காட்சிகளையும் கைப்பற்றியுள்ள பொலிசார், அந்த மர்ம நபர் தான் சுவாதியை கொலை செய்தாரா என்பதை உறுதி செய்வதற்குரிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில் சுவாதியை கொலை செய்த கொலைகாரனை நுங்கம்பாக்கம் ரெயில் நிலைய கன்டீன் ஊழியர் ஒருவர் பொலிசாருக்கு அடையாளம் காட்டியுள்ளார். இந்த கொலை தொடர்பாக கன்டீன் ஊழியர்’ பொலிசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கொலை சம்பவம் குறித்து அவர் பொலிசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது..
கொலைகாரனும், அந்த பெண்ணும் சிறிது நேரம் கடை அருகே நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை நான் கவனிக்கவில்லை. ஆனால் காரசாரமாக சென்ற அவர்கள் பேசிக் கொண்டார்கள்.
திடீரென்று `அய்யோ… அம்மா…’ என்ற குரல் கேட்டது. அந்த கொலைகாரன் பக்கவாட்டில் சற்று பின்பக்கமாக நின்று அந்த பெண்ணை அரிவாளால் வெட்டினான். உடனே அந்த பெண் ரத்தம் பீறிட்ட நிலையில் தரையில் சாய்ந்து விட்டார்.
சிறிதுநேரம் அவர் உயிருக்கு போராடிய படி இருந்தார். அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்த எங்களால் அப்போது ஒன்றும் செய்யமுடியவில்லை.
உடனே அந்த கொலைகாரன் மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டான். அதன்பிறகு நாங்கள் ஓடிச்சென்றுபார்த்தோம். ஆனால் அதற்குள் அவர் இறந்துவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கின் தனிப்படை பொலிசார் சுவாதியின் நெருங்கிய தோழிகளிடம் விசாரிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
சுவாதியை அச்சுறுத்தும் வகையில் ஏதேனும் நெருக்கடி ஏற்பட்டிருந்தால், அதை அவர் தனது தோழிகளிடம் கூறியிருப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளனர்.






