
இந்தியா ராஜஸ்தானில் பலாத்காரத்துக்குள்ளான பெண்ணுடன் அம்மாநிலத்தின் மகளிர் சங்க உறுப்பினர் சிரித்த முகத்துடன் செல்பி எடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுடன் மகளிர் சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் எடுத்த செல்பி இணையத்தில் பரவி வருகிறது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்குமாறு மகளிர் சங்கத்தின் உறுப்பினருக்கு சங்கத்தின் தலைவி உத்தரவிட்டுள்ளார்.சம்பவத்தன்று ஜெய்ப்பூர் வடக்குப் பகுதியில் உள்ள மகிளா பொலிஸ் நிலையத்திற்கு பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் அளிக்கச் சென்றுள்ளார்.
அப்போது ராஜஸ்தான் மகளிர் சங்கத்தின் தலைவி சுமன் ஷர்மா மற்றும் உறுப்பினர் குர்ஜார் ஆகியோர் அப்பெண்ணை நேரில் சந்திக்க அங்கு சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சுமன் விசாரித்துக் கொண்டிருந்த போது, அருகில் இருந்த குர்ஜார் இந்த செல்பிக்களை எடுத்துள்ளார்.அதுவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் அருகில் சிரித்தபடி முகத்தை வைத்துக் கொண்டு அவர் செல்பி எடுத்துள்ளார். இந்த சம்பவத்தை அங்கிருந்த வேறு ஒருவர் அதை புகைப்படமெடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்து விட்டார்.பாதிக்கப்பட்ட பெண்ணின் மனநிலையைப் புரிந்து கொள்ளாமல் செயல்பட்ட குர்ஜாருக்கு எதிராக கண்டனங்கள் எழுந்த நிலையில் , இந்த செல்பி குறித்து தனக்கு எதுவும் தெரியாது என மகளிர் சங்கத் தலைவி சுமன் ஷர்மா விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பாக மகளிர் சங்கத் தலைவி சுமன் ஷர்மா தெரிவிக்கையில்,
“பலாத்காரத்துக்குள்ளான பெண்ணுடன் நான் பேசிக்கொண்டிருந்த போது சங்க உறுப்பினர் இந்த செல்பிக்களை எடுத்துள்ளார். அவர் செல்பி எடுக்கும் போது நான் கவனிக்கவில்லை. இது போன்ற செயல்களில் எனக்கு உடன்பாடு கிடையாது.எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்குமாறு நான் அவரை கேட்டுக்கொண்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண், ராஜஸ்தானில் உள்ள அல்வார் மாவட்டத்தைச் சேர்ந்தவர். வரதட்சணையாக 51 ஆயிரம் வழங்காததால் தனது கணவர் மற்றும் இரு சகோதரர்களால் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அவர் பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளார்.அத்துடன் அப்பெண்ணின் நெற்றியிலும் கையிலும் கணவர் குடும்பத்தார் ‘வரதட்சணை தராததவர்’ என பச்சை குத்தியுள்ளனர்.





