விஜய்யின் தலைவா படம் தமிழ்நாடு முழுவதும் இன்று ரிலீசானது. கடந்த 9–ந்தேதி இப்படத்தை வெளியிட திட்டமிட்டனர். தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததால் படம் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு பல்வேறு தடைகளை தாண்டி தற்போது திரைக்கு வந்துள்ளது.
சென்னையில் 20–க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் படம் திரையிடப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் 400–க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியானது. அனைத்து தியேட்டர்களிலும் விஜய் கட்–அவுட்கள், பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.
ரசிகர்கள் காலை காட்சி பார்க்க அதிகாலையிலேயே தியேட்டர்களில் குவிந்தனர். அசோக்நகரில் விஜய் படப்பெட்டியை ரசிகர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். அங்குள்ள பிள்ளையார் கோவிலில் பூஜை செய்து சாரட் வண்டியில் படப்பெட்டியை ஏற்றினர். பின்னர் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்தார்கள்.
உதயம் தியேட்டரில் வந்து படப்பெட்டி இறக்கப்பட்டது. அங்கு ரசிகர்கள் கூட்டம் அலை மோதியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் கூட்டத்தினரை ஒழுங்குபடுத்தினர். படம் பார்க்க வந்தவர்களுக்கு ரசிகர்கள் லட்டு வழங்கினர்கள்.
ரசிகர் மன்ற நிர்வாகிகள் ரவிராஜா, ஏ.சி.குமார், பி.டி.செல்வகுமார், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் கலந்து கொண்டனர். எழும்பூர் ஆல்பட் தியேட்டரில் ரசிகர்கள் பட்டாசு வெடித்தனர். மதுரை திருப்பரங்குன்றத்தில் ரசிகர்கள் அலகு குத்தி படம் பார்க்க சென்றனர்.