இயக்குனர் சேரன் மகள் தாமினி, சூளைமேட்டை சேர்ந்த சந்த்ரு என்ற வாலிபருடன் காதல் வயப்பட்டு கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறினார். சந்த்ருவின் குடும்பத்தினருடன் சென்னை பொலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து புகார் கொடுத்த அவர் சந்த்ருவை கொலை செய்ய சேரன் முயற்சி செய்வதாக பரபரப்பான குற்றச்சாட்டை கூறினார்.
இதைதொடர்ந்து சேரன், பொலீசில் அளித்த புகாரில் சந்த்ருவின் நடவடிக்கை சரியில்லை என்றும், எனவேதான் அவரது காதலை நான் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் கூறியிருந்தார். இது தொடர்பாக கண்ணீர் மல்க பேட்டி அளித்த சேரன் “தனது மகளுக்கு கணவனாக வருபவர் நல்லவராக இருக்க வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன். காதலுக்கு நான் எதிரி இல்லை” என்று தெரிவித்தார்.
இதையடுத்து சேரனின் மகள் தாமினிக்கு பெண் பொலீசார் கவுன்சிலிங் அளித்தனர். கல்லூரி படிப்பை முடித்த பின்னர் காதலை பற்றி சிந்திக்கலாம் என்று அறிவுரை கூறினர். ஆனால் தாமினி காதலன் சந்த்ருவுடன்தான் செல்வேன் என்று பிடிவாதமாக கூறினார்.
இதனால் அவரை பொலீசார் காப்பகத்தில் தங்க வைத்தனர்.
இதற்கிடையே சந்த்ருவின் தாய் உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் 2 வாரங்களுக்கு தாமினி, தான் படித்த பள்ளி தலைமை ஆசிரியரின் வீட்டில் தங்கி இருக்க உத்தரவிட்டனர்.
இதன்படி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அவர் தனது குடும்பத்தினரை பிரிந்து வெளியில் தங்கியுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது தாமினி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
தனது மகள் மனம் மாறி எப்படியும் தன்னுடன் வந்து சேர்ந்து விடுவாள் என்று சேரன் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார். தலைமை ஆசிரியரின் வீட்டில் தாமினி தங்கி இருந்த போது அவருக்கு தினமும் கவுன்சிலிங் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தாமினி மனம் மாறியுள்ளாரா? என்பது தெரியவில்லை.
இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படும் போது நீதிபதிகள் அவரிடம் யாருடன் செல்ல விரும்பம்? என்று கேட்க உள்ளனர். இதற்கு தாமினி என்ன பதில் சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
காதலை மறந்து தந்தை சேரனுடன் தாமினி செல்வாரா? இல்லை குடும்பத்தினரை உதறிவிட்டு காதலனை கரம் பிடிப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இன்றுடன் தாமினியின் காதல் போராட்டம் முடிவுக்கு வரும் என்று தெரிகிறது.