பெர்னடைன் டிசோசா என்ற பெண் தனது சிறுவயது முதலே அமிதாப்பின் பரம ரசிகையாக இருந்து வருகிறார். தற்போது வரும் 18ம் திகதி 100 வயதை எட்டும் இவர், முதுமை காரணமாக வரும் அல்சைமர் என்னும் மறதி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
குடும்ப உறுப்பினர்களை எல்லாம் மறந்துவிட்ட நிலையிலும் அவருக்கு அமிதாப்பின் பெயர் மட்டும் நினைவில் இருக்கின்றது. அவருக்கு சாப்பாடு கொடுக்கக்கூட அமிதாப் அவரை வந்து பார்க்கப் போகின்றார் என்று சொல்லியே உணவு ஊட்டுவதாக அவரது குடும்பத்தினர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அவரை சந்தோஷப்படுத்த விரும்பிய அவரது குடும்பத்தினர், டிசோசா பற்றி அமிதாப்பிற்கு ஒரு தகவல் அனுப்பியிருந்தனர். அவருக்கு 100 வயதாவதை ஒட்டி அமிதாப் தனது ரசிகைக்கு ஒரு பிறந்தநாள் வாழ்த்து அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இத்தனை தள்ளாத வயதிலும் முதுமை மறதி நோயினால் பாதிக்கப்பட்டிருந்த போதிலும் தன்னுடைய பெயரை மட்டும் அவர் ஞாபகம் வைத்திருப்பதை அறிந்த அமிதாப் மிகவும் மனம் நெகிழ்ந்து போனார். உடனடியாக தன்னுடைய ரசிகைக்கு வீடியோ மூலம் வாழ்த்துச் செய்தியையும் அனுப்பியுள்ளார்.