வவுனியா பொருளாதார மத்திய நிலைய சர்ச்சை : முதல்வரின் முடிவிற்கு ஆதரவளிப்போம்!!

560

Eco.Ce.va - Copy

வவுனியா பொருளாதார மத்திய நிலைய அமைவிடம் தொடர்பான பிரச்சனைக்கு விளக்கமளித்து வடமாகாணசபை உறுப்பினர் இ.இந்திரராசா அனுப்பிவைத்துள்ள அறிக்கை வருமாறு..
இ.இந்திரராசா
மாகாண சபை உறுப்பினர்
வடமாகாண சபை

எனது அன்பிற்குரிய,

கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்களே!
கௌரவ மாகாண சபை உறுப்பினர்களே!

வவுனியா பொருளாதார மத்திய நிலையம் எங்கு அமைய வேண்டும்.

வவுனியாவில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமையவேண்டுமா? அல்லது தாண்டிக்குளத்தில் அமையவேண்டுமா? என்பது மிக முக்கிய பேசு பொருளாக அமைந்துள்ளதை தாங்கள் அறிவீர்கள்.

வேறு எந்தப் பிரச்சினைக்கும் கொடுக்காத முக்கியத்துவம் ஒரு சாதாரண விடயத்துக்காக ஏன் வழங்கப்படுகின்றது என்பது வியப்பாக உள்ளது.

இது பற்றி நீண்ட உரையாடல்கள் நிபுணர்குழு அறிக்கைகள் கலந்தாலோசிக்கப் பட்டிருந்தபோதும். உறுதியான முடிவை எடுக்கமுடியாத துர்பாக்கிய நிலையில் உள்ளோம். ஆதலால் இது பற்றி தெளிவுபட வேண்டிய தேவையுள்ளது.

15.10.2010ல் வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இவ்விடயம் விவாதிக்கப்பட்டு ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அக் கூட்டத்தில் இணைத் தலைவர்களாக அமைச்சர் கௌரவ றிசாட் பதியுதீன் கௌரவ ஆளுநர் சந்திரசிறி மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ந.சிவசக்திஆனந்தன், கௌரவ அ.அடைக்கலநாதன், கௌரவ நூர்தீன் மசூர் கௌரவ ஹுனைஸ் பாறுக், கௌரவ லிங்கநாதன் மற்றும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், உயர் அரச அதிகாரிகள் என 82 பேர் கலந்து கொண்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் வவுனியாவில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் வர்த்தக சங்க பிரதிநிதிகள் கூடி கலந்துரையாடி பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமையவேண்டும் என்பதை உறுதி செய்து முதலமைச்சரிடம் தெரிவிப்பதற்காக மறுநாள் அவரது அலுவலகத்தில் சந்தித்திருந்தோம்.

அக் குழுவில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ந.சிவசக்தி ஆனந்தன், கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன், கௌரவ சாந்தி சிறீஸ்கந்தராஜா, கௌரவ செல்வம் அடைக்கலநாதன் சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வினோநோகதாரலிங்கம், மாகாண சபை உறுப்பினர்களான கௌரவ லிங்கநாதன், கௌரவ ம.தியாகராசா, கௌரவ M.P.நடராஜ், கௌரவ அமைச்சர் ப.சத்தியலிங்கம் சார்பாக அவரது பிரத்தியேக செயலாளர் திரு ப.சத்தியசீலன் மற்றும் வர்த்தக சங்க பிரமுகர்கள் உட்பட நானும் கலந்துகொண்டிருந்தேன்.

30.06.2016ல் மீள்குடியேற்ற அமைச்சர் கௌரவ சுவாமிநாதன் மற்றும் கௌரவ முதலமைச்சர் கலந்து கொண்ட சிதம்பரபுர மக்களுக்கான காணி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய கௌரவ அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்கள் “பொருளாதார மத்திய நிலையத்திற்கான நிதி திரும்பி போய்விடக்கூடாது என்ற ஆதங்கத்தில்; தாண்டிக்குளத்தில் அமையவேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டுவந்தேனேயன்றி ஓமந்தையில் இது அமையுமாக இருந்தால் வரவேற்பேன் என்றும் அதுதான் எமது முதல் தெரிவும்” என பொருள்பட உறுதியாக கூறியிருந்தார்.

இத்தகைய உறுதிப்படுத்தல்களுக்கு பின்பும் 03.07.2016ல் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் கௌரவ இரா.சம்பந்தன் ஐயா தலைமையில் கூடிய வடக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை அமைச்சர்கள் கூடிய கூட்டத்தில் ஒரு முடிவும் எட்டப்படாமல் போனமையும் வாக்கெடுப்புக்கு விடத் தீர்மானித்தமையும் கவலைக்குரிய விடயங்கள்.

பொருளாதார மத்திய நிலையத்திற்கான இடத் தெரிவில் முதலமைச்சர் அவர்கள் தன்னிச்சையாக ஓமந்தையை தெரிவு செய்யவில்லை. ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத் தீர்மானம் வன்னிமாவட்ட பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களின் தீர்மானம், நிபுணர் குழு அறிக்கைகள் மற்றும் விவசாய உற்பத்திச் சங்கங்களின் கோரிக்கை என்பனவற்றிற்கு அமைவாகவே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

ஆகவே இத் தீர்மானத்தை மலினப்படுத்தி முதலமைச்சரை சங்கடப்படுத்தாமல் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத் தீர்மானத்திற்கமைவாகவும் மக்களதும் மக்கள் பிரதிநிதிகளதும் அபிலாசைகளை புரிந்து கொண்டும் தாங்கள் தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

இ.இந்திரராசா
வடக்கு மாகாண சபை உறுப்பினர்.

Eco.Ce.va