மாணவிகள் மூவர் கடத்தல் – இருவர் அநாதரவான நிலையில் மீட்பு!!

423

kidnapped-children-australia

இரத்தினபுரி – நிவித்திகலை தமிழ் பாடசாலை ஒன்றில் மாணவிகள் மூவர் கடத்தப்பட்டுள்ளதுடன், அதில் இருவர் இரத்தினபுரி பஸ் நிலையத்துக்கு அருகில் அநாதரவான நிலையில் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டு, பாடசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குறித்த மூன்று மாணவியரும் எவ்வாறு கடத்தப்பட்டனர் என்பது பற்றி பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தற்போது கடத்தப்பட்டுள்ள மாணவியின் தாயார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறி குறித்த மாணவியை வைத்தியசாலைக்கு அழைத்து வருமாறு தாய் தகவல் அனுப்பியுள்ளதாக தெரிவித்து நபர் ஒருவர் பாடசாலைக்கு சென்றுள்ளார். எனினும் பாடசாலை நேரத்தில் பெற்றோர், பாதுகாவலர் இல்லாமல் மாணவியை அனுப்ப பாடசாலை நிர்வாகமும், ஆசிரியர்களும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பாடசாலை முடியும் வரை காத்திருந்த சந்தேகநபர் குறித்த 3 மாணவிகளையும்முச்சக்கரவண்டி ஒன்றில் அழைத்துச் சென்றுள்ளதுடன், இரண்டு மாணிவிகளை இரத்தினபுரி நகரில் விட்டுவிட்டு மற்றைய மாணவியை கடத்திச் சென்றிருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை சந்தேகநபர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிவித்திகல, சிந்துருப்பிட்டிய தனியார் தேயிலைத் தோட்டத்திற்கு வந்துள்ளதாகவும், சந்தேகநபரின் வீட்டுக்கு அண்மையிலே குறித்த மாணவியின் வீடும் இருப்பதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இரத்தினபுரி நகரில் நிர்க்கதியான நிலையில் காணப்பட்ட மாணவிகள் இருவரையும் வைத்திய பரிசோதனைக்காக இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை நிவித்திகல பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன், மற்றைய மாணவிகளிடம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.