சம்மாந்துறை பகுதியில் தனது 15 வயது மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் தந்தை ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குருநாகல் பகுதியிலுள்ள சமயக் கல்வி போதனைக்கூடமொன்றில் கல்வி பயிலும் குறிப்பிட்ட மாணவி, கடந்த வருடம் டிசம்பர் மாதம் விடுமுறையில் சம்மாந்துறையிலுள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றிருந்தபோது தந்தையால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாயார் வெளிநாடு சென்றிருப்பதால், பாட்டியின் பராமறிப்பின் கீழ், இந்த சிறுமி வளர்ந்து வருவதுடன், குருநாகல் பகுதியிலுள்ள சமயப் போதனைக் கூடமொன்றில் தங்கியிருந்து கல்வி பயின்று வருகின்றார்.
சில தினங்களுக்கு முன்னர் விடுமுறையில் மீண்டும் சம்மாந்துறையிலுள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றபோது, சிறுமியின் உடல்நிலையில் மாற்றங்களை அவதானித்த பாட்டி, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையின் பின்னர், இறக்காமத்தில் வசித்துவரும் சிறுமியின் தந்தையை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைதுசெய்தனர்.
கல்முனை பதில் நீதவான் எம்.கே. பேரின்பராசா முன்னிலையில் சந்தேகநபர் நேற்று (090 ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






