சமையல் எண்ணெய் வகைகளுக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள தரத்தை அமுல்படுத்த நடவடிக்கை!!

711

Oil

சந்தையில் உணவு சமைப்பதற்காக பயன்படுத்தப்படும் எண்ணெய் வகைகளுக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள தரத்தை அமுல்படுத்துவதற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுதொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் ஹசித்த திலகரத்ன கூறினார்.

சந்தையில் காணப்படும் எண்ணெய் வகைகளின் தரம் குறித்து பரிசோதிப்பதற்கான நடவடிக்கைகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

உணவு சமைப்பதற்காக பயன்படுத்தப்படும் பாம் எண்ணெயின் தரம் தொடர்பில் கடந்த சில நாட்களாக பல்வேறு பிரச்சினைகள் தோன்றியிருந்தன.

மனித நுகர்விற்கு உதவாத பாம் எண்ணெய் கொண்டுவரப்பட்ட 24 கொள்கலன்கள் சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டதை அடுத்தே பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

சுத்திகரிக்கப்படாத பாம் எண்ணெயில் 5 வீதத்திற்கும் குறைவான கொழுப்பும், சுத்திகரிக்கப்பட்ட பாம் எண்ணெயி்ல் 0.1 வீதமாக கொழுப்பும் காணப்பட வேண்டும் என சுங்கப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

ஆயினும், கைப்பற்றப்பட்ட எண்ணெயில் 14 முதல் 20 வீத கொழுப்பு அடங்கியுள்ளமை பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, தரமற்ற உணவு சமைப்பதற்காக பயன்படுத்தப்படும் எண்ணெய் வகைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் மேலும் கூறியுள்ளார்.