வவுனியா மத்திய பேரூந்து தரிப்பிடத்திலுள்ள பொது மலசலகூடம் சுத்தம் இன்றி காணப்படுகின்றது. பிரதான பகுதியில் காணப்படும் இக் கழிவறையினை பல பொதுமக்கள் தூர இடங்களிலிருந்து வந்து பாவிக்கின்றனர்.
எனினும் இக்கழிவறை சுத்தம் இன்றி காணப்படுவதால் பொதுமக்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்கவேண்டியுள்ளனர். குறிப்பாக பணம் அறவிடப்படும் இக் கழிவறையில் சுத்தமாக இல்லாமை வவுனியா நகரசபையின் செயற்பாடுகளை பொது மக்கள் விமர்சித்து வருகின்றனர்.
வவுனியா நகர மத்தியில் காணப்படும் இக்கழிவறை சுத்தமாக வைத்திருக்க அதிகாரிகள் கவனம் எடுக்குமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக வவுனியா நகரசபைச் செயலாளர் த.தர்மேந்திரா அவர்களுடன் தொடர்பு கொண்டபோது வவுனியா நகரசபையினரால் கேள்வி கோரல் அறிவித்தல் ஊடக தனியார் ஒருவர் மலசலகூடத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் தற்போது சென்று பார்வையிட்டு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
மேலும் குறிப்பிட்ட சில நிமிடங்களில் சம்பவ இடத்திற்குச் சென்று கழிவறையினை பார்வையிட்ட வவுனியா நகரசபை செயலாளர் ஏற்கனவே இரு தடவைகள் குறிப்பிட்ட கேள்வி கோரல் மூலம் பெற்றுக் கொண்ட நபருக்கு அறிவுறுத்தியபோதும் சுத்தம் இன்மை காரணமாக காணப்பட்ட கழிவறையினை தற்காலிகமாக மூடிவிடுமாறும் சுத்தப்பணிகளை மேற்கொண்டபின்னர் நகர சபையின் சுகாதார பரிசோதகரின் அனுமதியுடன் மறுபடியும் திறக்குமாறும் அதுவரையில் கழிவறையினை தற்காலிகமாக மூடி வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள கழிவறையினை பொதுமக்கள் பயன்படுத்துமாறும் அறிவித்துள்ளார்.








