உடல் பருமனால் அகால மரணம்: பெண்களை விட ஆண்களுக்கே அதிகம் என்கிறது ஆய்வு முடிவு!!

515

images

அதிக உடல் பருமன் காரணமாக அகால மரணம் ஏற்படுவது பெண்களை விட ஆண்களுக்கே அதிகம் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.உடல் பருமன் அதிகரிக்க அதிகரிக்க பிற உபாதைகளும், பக்க விளைவுகளும் அதிகமாக தோன்றுவது அனைவரும் அறிந்த ஒன்றுதான். உடல் எடையைக் குறைப்பதற்கு பல்வேறு மருத்துவ வழிமுறைகள் இருந்தாலும் அதிகப்படியான உடல் எடை இருந்தால் குறைப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. எனவே, இது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், அதிக உடல் எடையுடன் இருப்பது, உரிய வயது முதிர்வுக்கு முன்பாகவே எதிர்பாராத விதமாக அகால மரணம் ஏற்படுவதற்கு நேரடியாக தொடர்புடையது என்றும், இந்த ஆபத்து பெண்களை விட ஆண்களுக்கு மூன்று மடங்கு அதிகம் இருப்பதாகவும் புதிய ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. லான்செட் மருத்துவ இதழில் இந்த ஆய்வு முடிவு வெளியாகி உள்ளது.

உலகம் முழுவதும் கிட்டத்தட்ட நாற்பது லட்சம் மக்களிடம் பெறப்பட்ட தகவல்களை பயன்படுத்தி எடுக்கப்பட்ட இந்த ஆய்வு, பருமனான மக்கள், சாதாரண எடையில் இருப்பவர்களை விட சராசரியாக மூன்று வருடங்கள் முன்னதாகவே உயிரிழப்பதாக கூறியுள்ளது.மேலும், மிகவும் பருமனான மக்கள் தங்களின் ஆயுள் காலத்தில் பத்து வருடங்களை இழப்பதாகவும் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.



அதிக எடையுடன் இருப்பது இதயம் மற்றும் நுரையீரல் தொடர்பான வியாதிகள், பக்கவாதம் மற்றும் புற்றுநோய் ஆகியவை ஏற்படும் ஆபத்தினை அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், இதன் பின்னணியில் உள்ள காரணங்கள் இந்த ஆய்வில் தெளிவுபடுத்தப்படவில்லை.