எங்கே இருக்கேன்னு தெரியலம்மா என தாயிடம் கதறிய படுகொலை செய்யப்பட்ட சிறுமி!!

927

Murder

தமிழகத்தின் மானாமதுரை அருகே கொலை செய்யப்பட்ட காளீஸ்வரி கடைசியாக தனது தாயிடம் எங்கே இருக்கேனு எனக்கு தெரியலம்மா என கதறிய செய்தி தற்போது தெரிய வந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கணபதியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த காளீஸ்வரி என்பவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் (யூலை 11) பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக காத்திருந்த காளீஸ்வரியை அவரது உறவினர் கார்த்திக் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் வருமாறு அழைத்துள்ளார்.

அப்பொழுது விக்னேஷ் என்ற மாணவனும் உடன் வருவதாக கூறியுள்ளார். ஆனால் இதை கார்த்திக் மறுத்து காளீஸ்வரியை மட்டும் அழைத்துச் சென்றுள்ளார்.

இதையடுத்து, நீண்ட நேரமாகியும் காளீஸ்வரி வீடு திரும்பாததால் பதற்றமடைந்த அவரது தாய் ஜெயா காளீஸ்வரி குறித்து அவரது நண்பர்களிடம் கேட்ட பொழுது விக்னேஷ் கார்த்திக் அழைத்து சென்றதை கூறியுள்ளார்.

உடனே ஜெயா கார்த்திக்கிற்கு போன் செய்து கேட்ட பொழுது, கார்த்திக் நண்பர் வீட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளான், இரவு அதிக நேரமாகியும் அவர்கள் வராததால் காளீஸ்வரியின் தாய் மறுபடியும் போன் செய்துள்ளார்.

அப்பொழுது காளீஸ்வரி எங்கே இருக்கிறேன் தெரியலம்மா என கதறியுள்ளார். இதை தொடர்ந்து, கார்த்திக் சித்தி என்னை மன்னித்து விடு நான் காளீஸ்வரியை கொலை செய்ய போகிறேன் என்று கூறிவிட்டு போனை ஆஃப் செய்து விட்டார்.

இதனால் பதற்றமடைந்த காளீஸ்வரியின் தாய் அப்பகுதி மக்களுடன் சென்று பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்பு பொலிசார் உதவியுடன் அப்பகுதி மக்கள் அனைவரும் டார்ச் விளக்குகளைக் கொண்டு தேடியுள்ளனர்.

அப்போது கழுத்தை அறுத்த நிலையில் கார்த்திக் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

அவரை மீட்டு மானாமதுரை மருத்துவமனையில் சேர்த்து அவரிடம் காளீஸ்வரி எங்கே என கேட்ட போது அவரை கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். இதன் பின்பு இரவு முழுவதும் காளீஸ்வரியை தேடி மறுநாள் காலையில் சடலமாக கண்டெடுத்தனர்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் சந்தி, துணைத் தலைவர் மணியம்மா ஆகியோர் காளீஸ்வரி வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறி நடந்ததை கேட்ட பொழுது இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும், காளீஸ்வரி கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து செல்லோ டேப், நூல் கயிறு, மது பாட்டில் ,பிஸ்கெட் பாக்கெட் கவர் போன்றவற்றை கண்டெடுத்துள்ளனர். இதனால் கார்த்திக் முன்கூட்டியே திட்டமிட்டு தான் இந்த கொலையை செய்திருக்க வேண்டும் என தெரியவந்துள்ளது.

மேலும், சம்பவ இடத்தில் இருந்த ரத்த மாதிரிகள், ரத்தம் தொய்ந்த கத்தி, செல்போன், அருகில் இருந்த கண்மாயில் நிறுத்தபட்டிருந்த கார்த்திக் பைக் முதலியவற்றை பொலிசார் சேகரித்துள்ளனர்.