கதிர்காமம் யாத்திரை செல்வோருக்கு நாய் இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வேட்டையாடப்பட்ட மான், மரை போன்ற விலங்குகளின் இறைச்சி என்ற போர்வையில் யாத்திரீகர்களுக்கு நாய் இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக “அஹிங்சா ஸ்ரீலங்கா” என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
விலங்குகளின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் ஓர் அமைப்பாக இந்த அமைப்பு திகழ்கின்றது.
கதிர்கால எசல யாத்திரை காலத்தில் அங்கு செல்லும் யாத்திரீகர்கள் வேட்டையாடப்பட்ட இறைச்சிகளை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அவ்வாறான நபர்களை இலக்கு வைத்து நாய் இறைச்சி விற்பனை மேற்கொள்ளப்படுவதாக அஹிங்சா ஸ்ரீலங்கா அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களிலும் அவ்வப்போது இவ்வாறு நாய்கள் இறைச்சிக்காக வெட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்ட போதிலும், இம்முறை திட்டமிட்ட அடிப்படையில் நாய் இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செல்லக் கதிர்காமத்திற்கு அருகாமையில் ஒர் இடத்தில் நாய்கள் பிடித்துச் செல்லப்பட்டு கட்டி வைக்கப்பட்டுள்ளதாகவும், யாத்திரீகர்கள் வேட்டையாடப்பட்ட மிருகங்களின் இறைச்சி வேண்டுமெனக் கோரினால் இந்த நாய்கள் வெட்டப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதியில் நாய்களின் தலைகளைக்கொண்ட பைகள் அண்மையில் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, மிருக வேட்டைக்காக விசம் கலந்த நீரைப் பயன்படுத்தி விலங்குகள் கொல்லப்பட்டு இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.