அம்மன் சிலையில் இருந்து கண்ணீர் வடிந்ததால் பரபரப்பு.!!

410

Amman

ராணிப்பேட்டை காரையை அடுத்த புளியங்கண் கிராம குளக்கரையில் கருமாரி அம்மன் கோவில் உள்ளது. நேற்று காலையில் அந்த பகுதியில் உள்ள சிறுவர்கள் அம்மன் சன்னதி முன்பு விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது சிறுவர்கள் தற்செயலாக அம்மன் முகத்தை பார்த்தபோது அம்மன் கண்களில் இருந்து கண்ணீர் போன்று வருவதை பார்த்துள்ளனர். உடனே சிறுவர்கள் அந்த பகுதியில் இருந்த பொதுமக்களிடம் இதுபற்றி கூறியுள்ளனர்.

இதனையடுத்து பொதுமக்கள் கோவிலுக்கு சென்று பார்த்தபோது அம்மன் கண்களில் இருந்து கண்ணீர் போன்று வருவதை பார்த்து பரவசம் அடைந்தனர். இந்த தகவல் காட்டு தீபோல கிராமம் முழுவதும் பரவியது. அதைத்தொடர்ந்து பக்தர்களும், பொதுமக்களும் கோவிலுக்கு சென்று பார்த்துவிட்டு சென்றனர். 2 கண்களிலும் கண்ணீர் போன்று வந்தது. காலை 11 மணிக்கு பிறகு அம்மனின் ஒரு கண்ணில் மட்டும் அதுபோன்று வந்தது. பின்னர் பகல் 12.30 மணிக்கு பின்னர் அது நின்று விட்டது.