ஆர்யா-விஜய் சேதுபதி இணையும் புறம்போக்கு!!

299

purampokku

யுடிவி மோஷன் பிக்சர்ஸ், தி வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் புதிய படத்திற்கு புறம்போக்கு என பெயரிட்டிருக்கின்றனர். இயற்கை, பேராண்மை படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் இந்த படத்தை இயக்குகிறார்.

ஆர்யா, விஜய் சேதுபதி முதன் முறையாக இணைந்து கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். இவர்களைத் தவிர மூன்றாவதாக இன்னொரு நாயகனும் நடிக்கப் போகிறார். கதாநாயகியர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

புறம்போக்கு என தலைப்பா என ஆச்சர்யத்துடன் கேட்பவர்களுக்கு, அதற்கான காரணத்தை சொல்கிறார் இயக்குனர் ஜனநாதன்.
புறம்போக்கு என்ற வார்த்தையை எல்லோரும் கொச்சையாகப் பேசுகிறார்கள். இந்த சொல் பற்றி மேலோட்டமான புரிதல் உள்ளது.

ஆனால் புறம்போக்கு என்கிற சொல் ஆழமான வரலாற்று ரீதியான பொருள் கொண்டது. வாழ்வியலின் அடிப்படையிலான கருத்தை உள்ளடக்கியதாகும். மக்கள் தேவைக்காக இருந்த பொது இடமான புறம்போக்கு நிலங்கள் இன்று மெல்ல மெல்ல தனியாரின் ஆக்கிரமிப்புக்கு ஆளாகி வருகிறது.

அதைப் பற்றிய பின்னணியை கொண்ட சிந்தனைதான் இப்படம். புறம்போக்கு என்று இனியாரும் ஏளனமாக கேலியாகப் பேசவேண்டாம்.
மலை, பனிச்சிகரங்கள், ஆறு, சர்வதேச கடல்பரப்பு, காற்று, ஒளி, நிலவொளி மட்டுமல்ல எல்லையற்ற அண்டவெளியும்கூட புறம்போக்குதான். எதுவும் தனியுடைமையல்ல. எல்லாமே பொதுவுடைமைதான் என்று கூறுகிறார்.

இப்படத்தில் உலகப் படங்களில் பணிபுரிந்த ஸ்டண்ட் மாஸ்டர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றவுள்ளனர். ஏகாம்பரம் என்பவர் ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பை இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், ஆந்திரப்பிரதேசம், சென்னை ஆகிய இடங்களில் நடத்த திட்டமிட்டுள்ளனர். வரும் அக்டோபரில் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. 2014 ஏப்ரலில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.