தான் நன்றியுள்ள மிருகம் என்பதை உறுதி செய்ய நாய் ஒன்று, 4 பாம்புகளை கொன்று தன்னை வளர்த்த குடும்பத்தை காப்பாற்றியுள்ள சம்பவம் நடந்துள்ளது.
ஒடிசா மாநிலத்தில் கஜபதி மாவட்டம் சேப்கபூர் கிராமத்தை சேர்ந்த திபாகர் ரய்தா என்பவர் தனது வீட்டின் காவலுக்காக டாபர்மேன் வகையை சேர்ந்த நாய் ஒன்றினை வளர்த்து வந்தார்.
இந்த நாயும் தனது காவல் பணியை சிறப்பாக செய்து கொண்டிருந்த நிலையில் கடந்த யூலை 11ம் திகதி காட்டில் இருந்து வந்த 4 பாம்புகள் திபாகர் ரய்தா வீட்டினுள் நுழைய முற்பட்டன.
இதை கண்ட நாய் 4 பாம்புகளுடனும் பயங்கரமாக சண்டை போட்டு பாம்புகளை கொன்று வீட்டிற்குள் இருந்த 8 பேரின் உயிரை காப்பாற்றியது.
இந்நிலையில், பாம்புகள் தாக்கிய விஷம் நாயின் உடலில் அதிகமாக இருந்ததால் நாயும் சிறிது நேரத்தில் உயிரிழந்தது.
இதை கண்ட திபாகர் குடும்பத்தினரும், அப்பகுதி மக்களும் வீர மரணம் அடைந்த நாயின் உடலை தகனம் செய்து மலர்த் தூவி மரியாதை செலுத்தினர்.