மெட்ராஸ் கபே படத்தை திரையிட தியட்டர் அதிபர்கள் மறுப்பு : படம் வெளியாவதில் சிக்கல்..!!

317

madrascafe

மெட்ராஸ் கபே படத்தை திரையிட தியேட்டர் அதிபர்கள் மறுத்து விட்டனர். இதனால் திட்டமிட்டபடி தமிழகம் முழுவதும் இப்படம் இன்று ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இந்தியில் தயாரான இப்படத்தை தமிழிலும் டப்பிங் செய்துள்ளனர்.

தமிழ் பதிப்புக்கு தணிக்கை குழுவினர் இன்னும் அனுமதி அளிக்கவில்லை. மெட்ராஸ் கபே படத்தில் விடுதலைப் புலிகளை தீவிரவாதிகளாக சித்தரித்து இருப்பதாக தமிழ் அமைப்பினர் எதிர்த்தனர். இதையடுத்து இரு தினங்களுக்கு முன் பிரத்யேகமாக படத்தை அவர்களுக்கு திரையிட்டு காட்டினர். படம் பார்த்த சீமான், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் முழுக்க தமிழர்களுக்கு எதிரான படம் இது என கொந்தளித்தனர்.

விடுதலைப்புலிகள், ஈழத்தமிழர்களை மட்டுமே படத்தில் கொச்சைப்படுத்தி உள்ளனர் என்றும், சிங்களர்கள் பற்றியோ, இலங்கை ராணுவத்தினர் தமிழர்களை கொன்று குவித்தது பற்றியோ எந்தவொரு காட்சியும் இடம் பெறவில்லை என்றும் அவர்கள் கூறினர். இந்தியா முழுவதும் இப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று வைகோ வற்புறுத்தினார். மீறி திரையிட்டால் தியேட்டர்களில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்தார்.

இந்த நிலையில் மதுரை உயர் நீதிமன்றத்தில் மெட்ராஸ் கபே படத்துக்கு தடை விதிக்க கோரி வக்கீல் பி.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார். நீதிபதிகள் ராஜேசுவரன், மதிவாணன் ஆகியோர் விசாரித்தனர். படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் ஆஜரான வக்கீல் டி.ஆர்.ராஜா கோபால் இலங்கையில் நடந்த உண்மையான சம்பவத்துக்கும், படத்தில் கூறப்பட்டுள்ள கதைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்றார்.

நீதிபதிகள் படத்தை வெளியிட தடை எதுவும் விதிக்கவில்லை. இந்த வழக்கு சம்பந்தமாக தமிழக போலீஸ் டி.ஜி.பி. மத்திய திரைப்பட தணிக்கை குழு ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
விசாரணையை அடுத்த மாதம் 3ம் திகதிக்கு தள்ளி வைத்தனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர் நேற்று மாலை சென்னையில் அவசர கூட்டம் நடத்தினார்கள். சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். மெட்ராஸ் கபே படத்தை திரையிடுவதா, வேண்டாமா என்பது குறித்து நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் என்ன முடிவுகள் எடுக்கப்பட்டது என்று பன்னீர் செல்வத்திடம் தொடர்பு கொண்டு கேட்ட போது ‘‘மெட்ராஸ் கபே படத்தை திரையிடுவதா வேண்டாமா அந்தந்த திரையரங்க உரிமையாளர்களே முடிவு செய்து கொள்ளலாம்’’ என அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றார்.

திரையரங்க அதிபர் ஒருவர் கூறும் போது ‘‘மெட்ராஸ் கபே படத்தை திரையிடக்கூடாது என தமிழ் அமைப்புகள் எதிர்த்து உள்ளன. முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாகவும் கூறியுள்ளனர். தியேட்டர்களுக்கு இது போன்ற பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருப்பதால் மெட்ராஸ் கபே படத்தை திரையிட மாட்டோம்’’ என்று கூறினார். தியேட்டர் முகப்புகளில் வைக்கப்பட்டு இருந்த மெட்ராஸ் கபே பட பேனர்களும் அகற்றப்பட்டு விட்டன.