சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்கள வடமாகாண அரையாண்டுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் நேற்று (16.07.2016) சனிக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் வவுனியா மேல்நீதிமன்ற கேட்போர் கூடத்தில் மாவட்ட சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர் கே.எம். நஜீம் தலைமையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் வடமாகாண நீதிமன்றங்களில் கடமையாற்றும் சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர்கள் மற்றும் சமுதாய சீர்திருத்த வேலைப் பரிசோதகர்கள் பங்குபற்றி தங்களுக்குக் கிடைக்கப்பெறும் சமுதாய சீர்திருத்தக் கட்டளைகள், முன்னேற்றங்கள், அடையப்பெற்ற வெற்றிகள் மற்றும் முறைமைப்படுத்தப்பட்ட அடைவு மட்டங்கள் தொடர்பாக நீண்ட கருத்துப் பரிமாற்றங்கள் அலசப்பட்டது.
இதில் அதிகமான கட்டளையாளர்கள் மன அழுத்தங்கள், குடும்பப் பிரச்சனைகள்,போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் மற்றும் கஞ்சா பாவணைக்கு உட்பட்டவர்கள் என பட்டியல் நீண்டு செல்கின்ற அறிக்கையினை தெளிவுபடுத்தியதுடன் அவர்கள் 22 வயதில் இருந்து 35 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும் மாவட்ட சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர் திணைக்களம் மாவட்ட மற்றும் பிரதேச செயலக மட்டங்களில் தமது சேவைகளையும் செயற்திட்டங்களையும் பிரதேச செயலாளர்களுடன் இணைந்து மேற்கொள்வதற்கு எதிர்காலத்தில் திட்டமிட்டுள்ளதாகவும் கருத்துரை வழங்கியதுடன் அவர்களை எமது திணைக்களத்துடன் இணைந்து பணியாற்ற அழைப்புவிடுத்தார்.
இக் கூட்டத்திற்கு மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம், பருத்தித்துறை, ஊர்காவற்துறை மற்றும் மல்லாகம் மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்றங்களில் கடமையாற்றும் சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர்கள் மற்றும் சமுதாய சீர்திருத்த வேலை பரிசோதகர்கள் கலந்துகொண்டு கருத்துரை வழங்கியமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.











