பி.ஏ படித்து மின்மயானத்தில் பணிபுரியும் பெண்!!

665

 
முற்றிலும் ஆண்களே ஆதிக்கம் செலுத்தும் தொழில்களில் அரிதான சில பணிகளில் பெண்கள் ஈடுபடுவது உண்டு. அவற்றில் ஒன்று மயானத்தில் சடலங்களை எரிப்பது. தமிழகத்தில் காஞ்சிபுரம் சேலம் உள்ளிட்ட சில இடங்களில் சடலங்களை எரிக்கும் பணியில் பெண்கள் ஈடுபட்டு வருகிறார்கள் என்றாலும், இதுவரை மின் மயானங்களின் பக்கம் பெண்கள் தலை காட்டியதில்லை.

இப்போது மின்மயானப் பணியிலும் பெண் ஒருவர் காலடி வைத்துள்ளார். அவர், பிரவீனா சாலமன். சென்னை வேலங்காடு மின்மயானத்தின் பொறுப்பாளராக பணியாற்றிவரும் பிரவீனா சாலமன் ஒரு பட்டதாரி என்பதும் ஆச்சர்யமான தகவல். சென்னையில் இயங்கிவரும் 38 மின்மயானங்களில் இந்த ஒரு மின்மயானத்தில் மட்டும்தான் பெண் ஒருவர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.

ஏதோ ஒரு சம்பளப் பணிக்காக இந்த வேலையில் பிரவீனா சேரவில்லை. சிறுவயதிலிருந்தே சமூக அக்கறை கொண்ட பெண்மணியாக வளர்ந்த அவர், சென்னை பல்கலையில் பி.ஏ ஆங்கிலம் பட்டம் பெற்று பின்னர் ‘இந்தியன் கம்யூனிட்டி சர்வீஸ்’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். ஏழைச் சிறுமிகள், பாலியல் தொழிலில் ஈடுபட்டுவரும் பெண்களின் குழந்தைகளுக்கு கல்வி சொல்லித்தரும் பணியை அங்கு மன நிறைவுடன் செய்திருக்கிறார்.

கடந்த 2014ம் ஆண்டு பிரவீனா சாலமனின் பணி மாறியது. அவர் சேவையாற்றி வந்த தொண்டு நிறுவனம் வேலங்காடு மின் மயானத்தை ஏற்று நடத்த முன்வந்தது. அப்போது அதை நிர்வகிக்கும் பொறுப்பு பிரவீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. பெண்கள் போகவே யோசிக்கும் மயானத்தில் எந்த நெருடலும் இன்றி பணியாற்ற புகுந்தார் பிரவீனா. அண்ணா நகரையொட்டி சுமார் 4.5 ஏக்கர் பரப்பளவில் இந்த மின்மயானம் அமைந்துள்ளது.

பிரவீனா பணியில் சேர்ந்த புதிதில், ஒரு பெண் மின்மயானத்தை நிர்வகிப்பதா என கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது சிலரிடமிருந்து. அப்பகுதி மக்களே பிரவீனாவுக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. தொடர்ந்து இந்த பணியைச் செய்தால் முகத்தில் ஆசிட் வீசிவிடுவதாக கூட சிலர் மிரட்டிப்பார்த்தனர். ஆனால் உறுதியாக நின்றார் பிரவீனா.

துர்நாற்றம் வீசிக் கொண்டு, மிகவும் மோசமான நிலையில் இருந்த மின்மயானத்தின் சுற்றுப்புறத்தை முதலில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். அவரது முயற்சியால் மயான வளாக சுவர்களில் அழகிய ஓவியங்கள் இடம்பெற்றன. வளாகத்தில் இருந்த மரங்கள் மீது தனிக்கவனம் செலுத்தினார். வளாகத்தில் கழிவறை வசதியும் ஏற்படுத்தப்பட்டது. இப்போது பார்த்தால் அது ஒரு மின்மயானம் போலவே தெரியாது: அழகிய பூங்கா போல காட்சியளிக்கிறது. இப்போது பிரவீனா அந்தப் பகுதி மக்களின் பாராட்டுக்குரிய பெண்மணியாக மாறியிருக்கிறார்.

ஒரு உடலை எரிப்பதற்கு மாநகராட்சி சார்பில் பிரவீனா குழுவினருக்கு 750 ரூபாய் வழங்கப்படுகிறது. சென்னை பெரு வெள்ளத்தின் போது,வேலங்காடு மின் மயானம் சிறப்பாக பணியாற்றியிருக்கிறது. மற்ற பகுதிகளில் மயானங்கள் முடங்கியபோது, பல உடல்கள் இங்கே கொண்டு வரப்பட்டு எரிக்கப்பட்டன. அந்த சமயத்தில் ஓய்வின்றி நாளொன்றுக்கு 4 முதல் 5 சடலங்களை பிரவீனா குழுவினர் எரித்திருக்கின்றனர்.

பிரவீனாவின் இந்த பணி, மற்றொரு பெண்ணை ஈர்க்க, கடந்த 6 மாதங்களுக்கு முன், திவ்யா என்ற அந்த இளம்பெண்ணும் பிரவீனாவுடன் கரம் கோத்திருக்கிறார்.

“சொந்த விருப்பத்தின் பேரிலேயே இந்த பணியில் சேர்ந்தேன். எப்போது வேலை வருமென்று தெரியாத பணி இது. அதனால் எந்த நேரத்திலும் நாங்கள் தயாராகவே இருப்போம். மனதுக்கு திருப்தி தருகிறது” எனக் கூறும் பிரவீனா இரண்டு குழந்தைகளின் தாயும் கூட.

1 2 3