யாரும் சட்டத்தை கையில் எடுக்க முடியாது : யாழ் சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்!!

631

Jaffna University Attack

எந்தவொரு நபருக்கும் சட்டத்தை கையிலெடுக்க முடியாது எனவும், யாழ்ப்பாண சம்பவம் தொடர்பில் சட்டத்தை பிழையின்றி செயற்படுத்தவுள்ளதாகவும் உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

யாழ் பல்கலைக்கழக மோதலில் பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்திக்க நேற்று அமைச்சர் தேசிய வைத்தியசாலைக்கு சென்றார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இங்கு மேலும் கூறியதாவது,

யாழ் பல்கலைக்கழக தாக்குதல் சம்பவத்தில் வௌியில் இருந்து வந்த குழுக்கள் தொடர்புபட்டுள்ளனர். வருடக் கணக்காக புதிய மாணவர்களை வரவேற்கும் முறையிலேயே இம்முறை நிகழ்வும் நடைபெற்றுள்ளது.

ஆனால் இங்கு ஏற்பட்ட சிறு மோதலை தேவையற்ற முறையில் திரிவுபடுத்தி பிரச்சினை ஏற்படுத்தப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தை நாம் விரைவில் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம்.

எவருக்கும் சட்டத்தை கையில் எடுக்க முடியாது. அரசாங்கம் சட்டத்தை நடைமுறைப்படுத்தும். சிசிடிவியை பார்த்து தேவையானவர்களை அடையாளம் காணுமாறு நான் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளேன், என்றார்.