இராணுவ புரட்சிக்கு சதி செய்தவர்களுக்கு எதிராக துருக்கி அதிபர் எர்டோகன் அதிரடி!!

262

Turkey

துருக்கியில் இராணுவ புரட்சிக்கு சதி செய்த 9 ஆயிரம் அரச அதிகாரிகள பதவியில் இருந்து தூக்கப்பட்டு உள்ளதாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கியில் அதிபர் எர்டோகன் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க இராணுவ புரட்சி நடத்தப்பட்டது. ஆனால் பொதுமக்கள் உதவியுடன் அப்புரட்சி முறியடிக்கப்பட்டது.

இதன்போது நடந்த துப்பாக்கி சண்டை மற்றும் மோதலில் 290 பேர் உயிரிழந்தனர். 1500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அதை தொடர்ந்து இராணுவ புரட்சிக்கு உதவியவர்கள் மற்றும் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இராணுவ புரட்சியில் ஈடுபட்டதாக இதுவரை 6 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 103 இராணுவ தளபதிகள் அடங்குவர். இவர்கள் தவிர புரட்சிக்கு உதவியதாக துருக்கி நீதி துறையை சேர்ந்த பல்வேறு மூத்த நீதிபதிகள் உள்பட 2745 நீதிபதிகளுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் 44 நீதிபதிகள் கைது செய்யப்பட்டனர். மேலும் இராணுவ புரட்சியில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு அதிபர் எர்டோகன் மறுப்பு தெரிவிக்கவில்லை.

உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள தகவலில் 9 ஆயிரம் அரசு அதிகாரிகள் பதவியில் இருந்து தூக்கப்பட்டு உள்ளனர். ஒரு மாகாண ஆளுநர், 29 நகர ஆளுநர்கள், மற்றும் 8777 பொது பணியாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.