பிரான்ஸ் ஹோட்டலில் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபரால் பரபரப்பு!!

335

France

தெற்கு பிரான்சில் உள்ள ஹோட்டல் ஒன்றில் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபரால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டுள்ளனர்.

பிரான்ஸின் தேசிய தினத்தை (ஜூலை 14) முன்னிட்டு நிகழ்த்தப்பட்ட வாண வேடிக்கையை காண பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கில் நைஸ் நகரில் திரண்டிருந்தனர். அப்போது வெடிபொருட்கள் நிரம்பிய டிரக் ஒன்றை வேகமாக ஓட்டிவந்த தீவிரவாதி பொதுமக்கள் கூட்டத்தில் மோதவிட்டான்.

இந்த தாக்குதலில் 84 பேர் கொல்லப்பட்டனர். 200க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இத்தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது.

இந்த சம்பவத்தின் கோர முகம் மறைவதற்குள், தற்போது தெற்கு பிரான்சின், பொலினி என்ற பகுதியில் உள்ள மெர்சில்லி நகரில் பார்முலா-1 என்ற ஹோட்டல் ஒன்றில் துப்பாக்கி, மற்றும் பயங்கர ஆயுதத்துடன் மர்ம நபர் புகுந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து அங்கு போலீசார் குவிந்துள்ளனர். மேலும் வெடிகுண்டு செயல் இழக்கச் செய்யும் போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு நிலவியது.