டெங்கு பரவும் வகையில் வீட்டு சூழலை வைத்திருந்த 103 வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு நகரில் உள்ளவர்களுக்கு எதிராகவே இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பிரதான வைத்திய நிபுணர் ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கடந்த 14ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சுமார் 8075 வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது டெங்கு பரவக்கூடிய வகையில் சுற்றுப்புற சூழலை வைத்திருந்த 103 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொழும்பை பொருத்தமட்டில் விரைவாக டெங்கு பரவும் வகையில் நாரஹேன்பிட்டி பிரதேசம் காணப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
இந்த வேலைத்திட்டத்தின் போது சூழல் பாதுகாப்பு பொலிஸார் உள்ளிட்ட 9000 பேர் பங்கெடுத்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த வேலைத்திட்டத்தின் போது 5 பாடசாலைகள் மற்றும் 14 கட்டுமான வேலைத்தளங்களில் டெங்கு நுளம்பு பரவும் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.






