விசாரணை வளையத்திற்குள் குஷ்பு!!

608

Kushboo

தமிழக காங்கிரசார் அனுப்பிய புகார்கள் குறித்து அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்புவிடம் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் விசாரணை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக சட்டசபை தேர்தலில், திமுகவுடன் கூட்டணி அமைத்து தமிழக காங்கிரஸ் 41 இடங்களில் போட்டியிட்டது. இதில், எட்டில் மட்டுமே கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து, கட்சியின் தலைவர் இளங்கோவன் மற்றும் அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்பு மீது, ஏகப்பட்ட புகார்களை கட்சி மேலிடத்துக்கு, தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள் அனுப்பினர்.

இதற்கிடையில், தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை இளங்கோவன் ராஜினாமா செய்தார். அடுத்த தலைவர் நியமனம் தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் பலரையும் அழைத்து கருத்து கேட்டு வருகிறது.

டெல்லி சென்ற குஷ்புவும், ராகுலை சந்தித்தார். அப்போது, குஷ்புவின் தேர்தல் நேரத்து செயல்பாடுகள் தொடர்பாக, ராகுல், அவரிடம் கொந்தளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது, அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருக்கும் நடிகை குஷ்பு, கட்சியின் பேச்சாளராகவும் உள்ளார். இதனால், தேர்தல் நேரத்தில் அவரை, கட்சித் தலைமை தீவிர பிரசாரத்துக்கு பயன்படுத்தி வருகிறது.

அந்த வகையில், சமீபத்திய சட்டசபை தேர்தலுக்கும் அவர் பிரசாரம் செய்தார். இதற்காக, கட்சி மேலிடத்தில் இருந்து அவருக்கு கணிசமான தொகை வழங்கப்பட்டது. கட்சிக்காரர்களிடம் பணம் பெறக்கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது. ஆனால், ஒவ்வொரு தொகுதிக்கும் பிரசாரத்துக்கு செல்லும்போது, போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்களிடம் பெரும் தொகையை குஷ்பு வசூலித்ததாக புகார் எழுந்தது.

பணம் தராத தொகுதிகளுக்கு அவர் பிரசாரத்துக்கு செல்லவில்லை. குறிப்பாக, கட்சியின் தேசிய செயலர் திருநாவுக்கரசர் மகன் ராமச்சந்திரன், அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட்டு, சொற்ப ஓட்டுகளில் தோல்வி அடைந்தார்.

அந்த தொகுதியின் பிரசாரத்துக்கு செல்ல குஷ்பு மறுத்து விட்டார். இதனால், குஷ்பு மீது, கட்சி மேலிடத்துக்கு புகார் சென்றது. இதையடுத்து தான், ராகுல், குஷ்புவிடம் விசாரணை நடத்தி உள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.