நடிகர் விஜய் டுவிட்டரில் இல்லை ஆனால் ரசிகர் மன்ற அறிக்கை வந்தது எப்படி??

565

vijay

விஜயின் பெயரில் வெளியான அறிக்கை எவ்வாறு வந்தது என்று தெரியவில்லை என விஜய்யின் மேலாளர் தெரிவித்துள்ளார். அரசியலுக்கு வர மாட்டேன் என்றும் ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால் மன்றத்தை கலைப்பேன் எனவும் நடிகர் விஜய் அறிவித்துள்ளதாக அவர் பெயரில் டுவிட்டரில் அறிக்கை வந்துள்ளது.

விஜய் ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி, அவற்றை நிர்வகித்து வருபவர் எஸ்.ஏ சந்திரசேகரன்தான். சமீபத்தில் மீனப்பாக்கம் விமான நிலையம் எதிரில் ரசிகர் மன்ற மாநாடு நடத்தி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க செய்யப்பட்ட ஏற்பாடு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

விஜய் பிறந்த நாள் விழாவைக் கூட வெளிப்படையாகக் கொண்டாடவில்லை. இதனைத் தொடர்ந்து வந்த தலைவா படப் பிரச்சினையில் விஜய் கெஞ்சும் நிலைமைக்கு தள்ளப்பட்டார். திரையுலகமும் அவருக்குக் கைக் கொடுக்கவில்லை.

ஒரு வழியாக படம் வெளியான பிறகு நான் அரசியலில் ஈடுபடமாட்டேன் என்ற விஜய் அறிக்கை வெளியானது.

அதில் எனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. ரசிகர்கள் தயவு செய்து பேனர்களில் அரசியல் வசனங்களை எழுத வேண்டாம். என் வேண்டுகோளையும் மீறி ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால் ரசிகர் மன்றத்தை கலைப்பேன் என்றும் ரசிகர் மன்றம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இனி நானே நேரடியாக ஈடுபடுவேன்.

என் தந்தையோ வேறு யாரோ ரசிகர் மன்ற விஷயங்களில் தலையிட மாட்டார்கள் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து நேற்று விஜய்யின் மக்கள் தொடர்பாளர் மற்றும் மேலாளர் பி.டி.செல்வகுமாரிடம் கேள்வி எழுப்புகையில் விஜய் ட்விட்டரில் இல்லை.

நானும் எந்த சமூக வலைத் தளத்திலும் இல்லை. அப்படி இருக்கும் போது விஜய் பெயரில் இந்தச் செய்தி எப்படி வெளியானதென்று தெரியவில்லை என்றும் இந்த செய்தியினை யாரும் நம்ப வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.