மட்டக்களப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொலை : நடந்தது என்ன?

406

1

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியான வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவிலுள்ள காக்காச்சிவட்டை என்ற குக்கிராமத்தில், பச்சிளங்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர், கோடாரியால் கொத்திப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அக்கிராமத்தில் மாத்திரமன்றி படுவான்கரை பிரதேசத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

காக்காச்சிவட்டை 1 ஆம் வட்டாரம், பாடசாலை வீதியிலுள்ள வீடு ஒன்றிலே இந்தத் துயரச் சம்பவம் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு வேளையில் இடம்பெற்றுள்ளது.

படுகொலை செய்யப்பட்டவர்களில், ஒரு வயதும் 6 மாதங்களேயான பிரசாந்தன் சஸ்னிகா என்ற குழந்தையும் அவருடைய தாயான பேரின்பம் விஜித்தா என்ற 24 வயதுடைய பெண்ணும், வீட்டு வளாகத்திலுள்ள கிணற்றிலிருந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை, சடலங்களாக மீட்கப்பட்டனர்.

படுகொலை செய்யப்பட்ட விஜித்தாவின் தந்தையான 56 வயதுடைய கந்தையா பேரின்பம், கடும் வெட்டுக் காயங்களுக்கு இலக்காகி குற்றுயிராய்க் கிடந்த நிலையில், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக, மட்டக்களப்பு போதனா, வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு எடுத்துச் செல்லும் போது உயிரிழந்துள்ளார்.

வீட்டின் சமையலறை உள்ளிட்ட அறைகள் இரத்தத்தினால் தோய்ந்து இருந்த நிலையில், கிணற்றின் சுவர் பகுதிகளில், ஆங்காங்கே இரத்தக்கறைகள் படிந்திருந்தன. குழந்தை மற்றும் தாயினது சடலங்கள், குப்புறக் கவிழ்ந்த நிலையில், கிணற்றுக்குள் மிதந்து கொண்டிருந்ததுடன், மோப்ப நாயுடன் சென்றிருந்த மட்டக்களப்பு குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள், சுமார் ஒன்றை மணிநேரத்துக்குள், கொலைகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், பேரின்பம் விஜித்தாவின் கணவரான பிரசாந்தன் என்ற 25 வயதுடைய நபரை பொலிஸார் கைதுசெய்தனர்.

தனது தந்தையின் வீட்டிலிருந்து சுமார் 150 மீற்றர் தூரத்துக்கு அப்பால் வசித்து வந்த பிரசாந்தனைத் திருமணம் முடித்த விஜித்தா, தன்னுடைய தந்தையின் வீட்டிலே, பிரசாந்தனுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இருவருக்கும் முதலாவது குழந்தையொன்று பிறந்து இறந்துள்ளது. இந்த நிலையிலேயே பின்னர், இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து இருவருக்கும் இடையில் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளன.

சண்டை போட்டுவிட்டு பிரசாந்தன் தலைமறைவாகிவிடுவதுடன், குடும்பத்துடன் சில நாட்களுக்கு தொடர்பைப் பேணுவதே இல்லை என்றும் அறியமுடிகின்றது.

இரண்டாவது குழந்தையின் பிறப்பில் சந்தேகம் கொண்டே பிரசாந்தன் தன்னுடைய மனைவியுடன் ஒவ்வொரு நாளும் சண்டையிட்டுள்ளார். மதுபோதையில் வரும் அவர், சில நாட்களில் மனைவியையும், ஏன், குழந்தையும் கூட கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளார் என்றும் அறியமுடிகிறது.

கணவனின் கட்டுக்கடங்காத செயற்பாட்டைப் பொறுத்துக்கொள்ள முடியாத விஜித்தா, இது தொடர்பில் வெல்லாவெளிப் பொலிஸில் முறையிட்டுள்ளார். இந்த முறைப்பாடு தொடர்பில் இவ்விருவரையும் கடந்த 22ஆம் திகதியன்று அழைத்த பொலிஸார், விசாரணை நடத்தியுள்ளனர். பிரசாந்தனின் அட்டகாசமும் கொடுமைகளும் தாங்கிக்கொள்ள முடியாதவை என்பதனால், அவருடன் தொடர்ந்து குடும்பம் நடத்த முடியாது என்றும் தனக்கு விவாகரத்து வேண்டுமென்றும், மனைவியான விஜித்தா, பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

எனினும், விஜித்தாவுடன் சேர்ந்து வாழ்வதற்குத் தனக்கு விருப்பம் என்று, பிரசாந்தன் அன்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் இவ்விருவரும் கலந்துபேசி, 28 ஆம் திகதியன்று அறிவிக்குமாறு சமரசம் செய்து, இவ்விருவரையும் அவரவரின் வீடுகளுக்கு பொலிஸார் அனுப்பிவைத்துள்ளனர்.

கணவனின் அச்சுறுத்தல் காரணமாக, பக்கத்து வீடுகளில் வசிக்கும் உறவுக்காரப் பெண்களை, பாதுகாப்புக்காக தன்னுடைய வீட்டுக்கு அழைத்து தங்க வைப்பதை விஜித்தா வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார்.

சம்பவ தினமான சனிக்கிழமையும், அவ்வாறே இரண்டு பெண்கள், விஜித்தாவின் வீட்டில் உறங்குவதற்காக வந்துள்ளனர். தந்தையான பேரின்பம், அருகிலுள்ள மற்றொரு வீட்டில் உறங்குவதற்காகச் சென்றுவிட்டார்.

இந்நிலையில், இரவு 9 மணியளவில் விஜித்தாவின் கைத்தொலைபேசிக்கு தொடர்பினை ஏற்படுத்திய பிரசாந்தன், தான் இன்றிரவு வீட்டுக்கு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, பாதுகாப்புக்காக வந்திருந்த பெண்களை அவர்களுடைய வீடுகளுக்கு அனுப்பிவைத்துவிட்டு, விஜித்தா காத்திருந்துள்ளார்.

சுமார் 10 மணியளவில் போதையில் வந்த பிரசாந்தன், ‘நாமிருவரும் இணைவதா, இல்லையா என்பது தொடர்பில், இன்று நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் தான் முடிவு தெரியும்’ என்று கூறியுள்ளார்.
வாக்குவாதத்திலும் ஈடுபட்டதனை, இவற்றையெல்லாம், அக்கம் பக்கத்து வீட்டார் காதுகொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்துள்ளனர். சிறிது நேரத்தில், அவ்வீட்டில் மயான அமைதி நிலவியுள்ளது. அப்படியாயின் அவ்விருவரும் சமாதானமாகச் சென்றுவிட்டனர் என்று எண்ணிய தாங்கள், நித்திரைக்குச் சென்றுவிட்டதாக அக்கம் பக்கத்து வீட்டார் தெரிவித்தனர்.

அன்று நள்ளிரவு சுமார் 12 மணியளவில், தன்னுடைய வீட்டுக் கிணற்றில், பாரமான பொருட்கள் விழும் சத்தம், பக்கத்து வீட்டில் படுத்திருந்த கந்தையா பேரின்பத்தின் காதுகளுக்குக் கேட்டுள்ளது.
சத்தத்தில் சந்தேகம் கொண்ட அவர், தன்னுடைய வீட்டை நோக்கி ஓடியுள்ளார். அங்கு கோடாரியுடன் நின்றுகொண்டிருந்த மருமகனான பிரசாந்தன், அவரையும் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளார்.

அவரின் அபயக்குரல் கேட்டு ஓடோடி வந்த அக்கம் பக்கத்து வீடுகளைச் சேர்ந்தவர்கள், இரத்தம் ஒழுக, ஒழுக அவரை ஆட்டோவில் ஏற்றி, களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு அன்றிரவே, எடுத்துச்சென்றுள்ளனர். போகும் வழியிலேயே, அவர் தனக்கு நேர்ந்ததை கூறி, மரண வாக்குமூலத்தையும் அளித்து விட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையிலேயே இந்தச் சம்பவம் தொடர்பில், பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை விடிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த வெல்லாவெளி, பொலிஸார், கிணற்றில் மிதந்து கொண்டிருந்த சடலங்கள் தொடர்பில் நீதவானின் கவனத்துக்குக் கொண்டுவந்ததுடன், விசாரணைகளைத் துரிதப்படுத்தியுள்ளனர்.

எனினும், கொலைகளைச் செய்தார் என்று சந்தேகிக்கப்படும் பிரசாந்தனும், தனக்கு எதுவுமே தெரியாதது போல அங்கு, குழுமியிருந்த கூட்டத்தோடு கூட்டமாக நின்று உலாவுவதை, பொதுமக்களும், ஏனையவர்களும், அவதானித்து கொண்டிருந்துள்ளனர்.

இந்நிலையில், இரத்தம் தோய்ந்திருந்த தலையணையை நுகர்ந்த மோப்பநாய், பிரசாந்தன் நின்றுகொண்டிருந்த இடத்துக்குச் சென்று, அவர்மீது தாவியுள்ளது. சந்தேகத்தின் பேரில் அவரைக் கைதுசெய்த வெல்லாவெளிப் பொலிஸார், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாகத் தெரிவித்தனர்.

இந் நிலையில், களுவாஞ்சிகுடி சுற்றுலா, நீதவான் நீதிமன்ற நீதிபதி யு.எல்.எம்.றிஸ்வி மற்றும், மட்டக்களப்பு மாவட்ட சட்ட வைத்திய நிபுணர் எச்.எம்.ஏ.தர்மசேன ஆகியோரின், முன்னிலையில் கிணற்றிலிருந்த சடலங்கள் இரண்டும் மீட்கப்பட்டு, நீதவான் விசாரணைகளின் பின்னர் பிரேத பரிசோதனைகளுக்கான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

2 3