வேதாராண்யம் அருகே கோவில் திருவிழாவில் தேர் சக்கரத்தில் சிக்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேதாராண்யம் அருகே கரும்புலத்தில் உள்ள சீதாள மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழா தற்போது நடந்து வருகிறது.
இந்நிலையில், 10 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் 4ஆம் நாள் தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் ஊர் பொதுமக்கள் தேரை இழுத்து வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, அதே பகுதியை சேர்ந்த முருகானந்தம் என்பவரின் மகன் சரவணக்குமார்(15) என்ற சிறுவன் தேரின் அருகே நடந்து வந்து கொண்டிருந்தபோது பொது மக்களின் கூட்ட நெரிசலில் சிக்கி தேர் சக்கரத்தின் அடியில் சிக்கி கொண்டான்.
தேர் சிறுவன் மேல் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.
தகவலறிந்த அப்பகுதி பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்தனர். பின்பு இந்த சம்பவம் குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்