சுவாதி கொலை வழக்கின் இப்போதைய நிலை என்ன?

355

Swathi Murder

மென்பொறியாளர் சுவாதி படுகொலை வழக்கில் மீண்டும் ராம்குமாரை காவலில் எடுக்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறது காவல்துறை.

ஆதாரத்தை அழிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டுகிறது பொலிஸ் என்கின்றனர் ராம்குமாரின் வழக்கறிஞர்கள்.

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், தனியார் நிறுவன மென்பொறியாளர் சுவாதி படுகொலை செய்யப்பட்டு ஒரு மாதமாகிவிட்டது. கொலையில் சந்தேகப்படும் ராம்குமார் என்ற நபரை, நெல்லையில் கைது செய்தது தனிப்படை.

இந்த வழக்கில், ‘ ராம்குமார் மட்டும்தான் குற்றவாளியா? அவருக்குப் பின்னால் இருந்து இயக்கியவர்கள் யார்? காவல்துறையில் சுவாதியின் நண்பர் கொடுத்த வாக்குமூலத்தை வெளியிட மறுப்பது ஏன்?’ என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்புகின்றனர் அவரின் வழக்கறிஞர்கள்.

இந்நிலையில், புழல் சிறையில் குற்றவாளியை அடையாளம் காட்டும் அணிவகுப்பு, மூன்று நாட்கள் பொலிஸ் காவல் என அடுத்த கட்டத்தை நோக்கி வழக்கு நகர்ந்து வந்தது.

தற்போது, மீண்டும் ராம்குமாரை பொலிஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது காவல்துறை.

இதை ராம்குமாரின் வழக்கறிஞர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. புழல் சிறையில், விசாரணை கைதிகளுக்கான பிளாக்கில் அடைக்கப்பட்டிருக்கிறார் ராம்குமார்.

கழுத்தில் ஏற்பட்டுள்ள காயங்கள் நன்கு ஆறிவிட்டதால் இயல்பாகப் பேசும் நிலைக்கு வந்திருக்கிறார். அவரைத் தனியாக அடைத்து வைக்குமாறு கோரிக்கை வைத்தோம். அதற்கு சிறை நிர்வாகம் மறுத்துவிட்டது. அவருடன் இரண்டு கைதிகள் தங்கியுள்ளனர். அவர்கள் கைதிகள் அல்ல. கைதிகள் போர்வையில் இரண்டு பொலிஸ் தங்கியுள்ளனர்.

யாருடனும் அவர் விரிவாகப் பேசிவிடக் கூடாது என்பதற்காக, தங்கள் பிடிக்குள்ளேயே வைத்திருக்கிறது பொலிஸ். இது வழக்கின் மீதான சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்துகிறது என்கிறார் வழக்கறிஞர் ராமராஜ்.

மேலும் அவர் தொடர்ந்து, சிறையில் ராம்குமாரை சந்திக்கச் செல்பவர்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றனர். சிறைக்குள் அவரைச் சுற்றியுள்ள பொலிஸாரால் மனரீதியான அழுத்தத்திற்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்.

ஏற்கெனவே மூன்று நாட்கள் பொலிஸ் காவல் முடிந்து புழல் சிறைக்கு அனுப்பப்பட்டுவிட்டார். கஸ்டடியில் இருந்த மூன்று நாட்களும் அவரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது.

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, நடித்துக் காட்ட வைத்து வீடியோ பதிவு எடுக்க பொலிஸார் முயற்சி செய்தனர்.
அப்போதைக்கு முடியாததால், தற்போது மீண்டும் ஒருநாள் விசாரணை கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர் பொலிஸார்.

சம்பவ இடத்தில் இந்தக் கலர் சட்டை அணிந்திருந்தார்; இந்தக் கைப்பையில்தான் ஆயுதம் எடுத்துச் சென்றார்’ என வீடியோ பதிவு எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

படுகொலை வழக்கில் கிடைத்துள்ள ஆதாரங்களை முற்றிலும் அழித்துவிட்டு, புதிய வீடியோ பதிவின் மூலம் குற்றவாளி இவர்தான் என உறுதிப்படுத்தும் வேலைகளில் இறங்கிவிட்டனர்.

இந்த அக்கறையை வேறு ஏதாவது வழக்கில் இவர்கள் காட்டியிருக்கிறார்களா, மறு விசாரணை என்ற பெயரில் உண்மைக் குற்றவாளிகளை திசை திருப்பிவிடும் முயற்சியாகவே இதைப் பார்க்கிறோம். பொலிஸ் காவலுக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என மனுத்தாக்கல் செய்ய இருக்கிறோம் என்றார் விரிவாக.

இது தொடர்பாக பொலிஸ் தரப்பில் விசாரித்தபோது, நீதிமன்றம் கொடுத்த கால அவகாசத்திற்குள் தேவைப்படும் அளவுக்கு ஆதாரங்களைத் திரட்டிவிட்டோம். இன்னமும் விசாரணை முடியவில்லை.

எனவேதான், மீண்டும் காவல் விசாரணைக்கு அனுமதி கோருகிறோம். வழக்கில் ராம்குமார்தான் குற்றவாளி என்பதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன.

புழல் சிறையில் அவரைச் சுற்றியும் பொலிஸார் உள்ளனர் என்பது சுத்தப் பொய் என்று தெரிவித்தனர் காவல்துறை அதிகாரிகள். .

-விகடன்-