மூக்கடைப்பிற்காக ஆவி பிடிக்கும் சிகிச்சையை மேற்கொள்வது பலன் தரும் என்று தான் இது வரை கருதப்பட்டு வந்தது. இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள சௌதாம்டன் பல்கலைகழக மருத்துவ விஞ்ஞானிகள் நாள்பட்ட மூக்கடைப்பிற்கு ஆவி பிடிக்கும் சிகிச்சை மட்டுமே தொடர்வது முழு பலனைத்தராது என்று கண்டறிந்திருக்கிறார்கள்.
மேலும் நாள்பட்ட மூக்கடைப்பிற்காக ஆவி பிடிக்கும் சிகிச்சையுடன் வேறுசில சிகிச்சைகளையும் இணைத்து கூட்டு சிகிச்சையாக அளிக்கும் போது தான் பலன் கிடைக்கும் என்றும், ஆவி பிடிக்கும் சிகிச்சையை மட்டும் தொடர்ந்தால் மூக்கடைப்பு குணம் ஆகாதது மட்டுமில்லாமல் வேறு சில பக்க விளைவுகளையும் ஒரு சிலருக்கு ஏற்படுத்தக்கூடும் என்பதையும் கண்டறிந்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.
தூசிகளால் ஏற்படும் சளி காய்ச்சல், சைனஸ் பாதிப்பு, மூக்கில் சதை வளர்தல் போன்றவைகளால் தான் நாள்பட்ட மூக்கடைப்பு எற்படுகிறது என்றும், பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும் தற்காலிக மற்றும் நிரந்தரமற்ற மூக்கடைப்பிற்கு ஆவி பிடிக்கும் சிகிச்சை நல்ல பலனைத்தரும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.
தலைவலி மற்றும் பார்வையில் கோளாறு ஆகியவையும் இந்த மூக்கடைப்பின் அறிகுறிகளாக கருதலாம் என்றும் அந்த ஆய்வில் கண்டறிந்து தெரிவித்திருக்கிறார்கள்.
எனவே நாள்பட்ட மூக்கடைப்பு இருப்பவர்கள் ஆவி பிடிக்கும் சிகிச்சையை மட்டும் தொடராமல் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் கூட்டு சிகிச்சையையும் மேற்கொண்டால் பலன்கிட்டும் என்பது இதன் மூலம் தெரியவருகிறது.