வவுனியாத் தமிழ்ச்சங்கம் நடத்தும், ஈழத்தின் மூத்த அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு (திரு மாஸ்டர்) அவர்கள் எழுதிய, இலங்கை அரசியல் யாப்பு (டொனமூர் யாப்பு முதல் உத்தேச சிறிசேன யாப்புவரை 1931 – 2016) நூல் வெளியீட்டு விழா, எதிர்வரும் 06 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு வவுனியா சிந்தாமணிப்பிள்ளையார் ஆலய கலாமண்டபத்தில் நடைபெறவுள்ளது.
வவுனியா தமிழ்ச்சங்கத்தின் ஸ்தாபகர், தமிழருவி.த.சிவகுமாரன் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் கௌரவ சி.வி.விக்னேஸ்வரன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வடமாகாணசபை உறுப்பினர்களான ம.தியாகராசா, இ.இந்திரராசா, திருமதி.அனந்தி சசிதரன், மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியத் தலைவர் வி.எஸ்.சிவகரன் ஆகியோரும் கலந்துகொள்வர்.
நிகழ்ச்சிகளின் வரிசையில் மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தை திருமதி.பராசக்தி ஜெகநாதனும் வரவேற்புரையை சிவ.கஜேந்திரகுமாரும் தொடக்கவுரையை தமிழ்மணி மேழிக்குமரனும் நிகழ்த்துவர்.
தலைமையுரையினையடுத்து அறிமுக உரையினை மூத்த பத்திரிகையாளர் ச.யோகரட்ணமும் (ராதையன்) வழங்குவார். பிரதம விருந்தினர் நூலினை வெளியிட்டுவைக்க முதற்பிரதியை பிரித்தானியா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைச் செயலாளர் கலாநிதி இரவீந்திரநாதனும் பொருளியல் ஆசிரியர் செ.சுதாகரனும் பெறுவார்கள்.
சிறப்பு பிரதிகள் வழங்கலைத் தொடர்ந்து நூலாய்வினை பத்தி எழுத்தாளரும் அரசியல் ஆய்வாளருமான நிலாந்தன் நிகழ்த்துவார். சிறப்புரையை சட்டத்தரணியும் அரசியல் ஆய்வாளருமான சி.அ.ஜோதிலிங்கம் வழங்குவார். சிறப்பு விருந்தினர், கௌரவ விருந்தினர் உரைகளைத் தொடர்ந்து நன்றியுரையை வவுனியா தமிழ்ச்சங்கத்தின் பொருளாளர் கி.உதயகுமார் நிகழ்த்துவார்.