இந்தியக் குடியுரிமை வழங்கக் கோரி இலங்கை அகதிகள் சென்னையில் அமைதிப் பேரணி!!

569

Srilankan Refugees in chennai

தமக்கு இந்தியக் குடியுரிமை வழங்கக் கோரியும், நாடு திரும்ப விரும்புவோருக்கான தண்டப்பணத்தை குறைக்க கோரியும் இலங்கை தமிழ் அகதிகள் சென்னையில் அமைதிப் பேரணி ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

சுமார் 600 இலங்கைத் தமிழ் அகதிகள் பங்கேற்றிருந்த இந்தப் பேரணியின் முடிவில், தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்றை முதலமைச்சர் பணியகத்தில் கையளித்தனர்.

அந்த மனுவில், தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும், முகாம்களுக்கு வெளியே வசிக்கும் அகதிகள் நாடு திரும்பும் போது செலுத்த வேண்டிய தண்டப்பணத்தைக் குறைக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

இந்தப் பேரணியில் பங்கேற்ற ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் செயலாளர் ஞானராஜ் கருத்து தெரிவிக்கையில்,

முகாம்களுக்கு வெளியில் உள்ள அகதிகள் நாடு திரும்பும் போது, இந்தியாவில் தங்கியிருந்த காலம் தொடக்கம் ஆண்டு ஒன்றுக்கு 3600 ரூபாவைத் தண்டப்பணமாகவும், நுழைவிசைவுக் கட்டணமாக 13,500 ரூபாவையும் செலுத்த வேண்டியுள்ளது.

நீண்டகாலமாக இந்தியாவில் தங்கியுள்ளவர்கள் இதற்காக இலட்சக்கணக்கான ரூபாவைச் செலுத்த வேண்டியிருக்கும்.

நாடு திரும்புவதற்கு விரும்பும் பலர், தண்டப்பணம் செலுத்த வசதியில்லாததால், தமிழ்நாட்டிலேயே தங்கியிருக்கின்றனர்” என தெரிவித்துள்ளார்.